சேலம், ஏப்.9: சேலம் மாவட்டத்தில் ஆன்லைன் சார்ந்த தொழிலாளர்கள், இ-ஷரம் இணையதளத்தில் பதிவு செய்ய வரும் 17ம் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுதொடர்பாக சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம், ஸ்விகி, ஜோமோட்டோ போன்ற ஆன்லைன சார்ந்த தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அத்தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு பலன்களை பெற வசதியாக, இ-ஷரம் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தில் இந்த இ-ஷரம் இணையதளத்தில் பதிவு செய்ய வரும் 17ம் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாம் கோரிமேட்டில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை வளாக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெறும். எனவே, முகாமில் கலந்துகொள்ளும் தொழிலாளர்கள், தங்களது ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


