செங்கல்பட்டு, டிச. 5: தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியில், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரால் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 2025ம் ஆண்டு, சர்வதேச மகளிர் தின விழாவின்போது பெண்களில் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிர் ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளதால், மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சேவை பற்றிய செயல்முறை விளக்கபுகைப்படம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் புகைப்படம், சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை மற்றும் சமூகப்பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று பெற்று 31.12.2024க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் உரிய படிவத்தில் கருத்துருவினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று பிரதிகளை 9.1.2025க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.


