அரியலூர் மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் 10, 12ம் வகுப்பில் மாவட்ட அளவில் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ரூ.10,000
அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 313 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் 2023-2024 கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் என மொத்தம் 6 மாணவிகளுக்கு ரூ.60,000 மதிப்பில் காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 2 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளையும் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


