உலக நன்மைக்காக ஒரு யாகம்!
நாளுக்கு நாள் இயற்கையின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மக்களுக்கு பொருளாதார பிரச்னைகள் இருந்துகொண்டே.. இருக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்ட ``ஸ்ரீதிரிதண்டி ஸ்ரீமன் நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் ஸ்வாமிகள்’’, உலக நன்மைக்காக யாகம் நடத்த முடிவு செய்தார். ஏற்கனவே, மகான் ஸ்ரீ ராமானுஜரின் கொள்கைகளை உலக முழுவதிலும் பரப்பி வரும் சின்ன ஜீயர் ஸ்வாமிகள், தற்போது மக்களின் நன்மைக்காகவும், எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும் இந்த மகத்தான யாகத்தை நடத்திட தீர்மானித்துள்ளார்.இந்த யாகத்தின் பெயர் ``ஸமதா இஷ்டி மஹா யாகம்’’. ``ஸமதா’’ என்றால் எல்லோருடைய என்று பொருள். ``இஷ்டி’’ என்றால் விருப்பம் என்று பொருள். ஆக, அனைவரின் விருப்பங்களும் நிறைவேற வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகின்ற யாகம்.தமிழகத்தில் உள்ள சுமார் 3000 கிராமங்களில் இருந்து மக்கள் இந்த யாகத்தில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த மகத்தான யாகமானது, நவம்பர் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சென்னை பெரம்பூரில் உள்ள SPR Cityல் நடைபெற உள்ளது. மேலும், விசேஷ பூஜைகள், பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்புத் திருமஞ்சனங்கள் நடைபெறவுள்ளது. நவம்பர் 6ஆம் தேதியில் அங்குரார்ப்பணத்தில் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி மகா பூர்ணாஹுதி மற்றும் ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணத்துடன் நிறைவடைகிறது.நம் வாழ்வில் சந்திக்கும் பல பிரச்னைகளின் தீர்வுகளுக்கு மகான்களின் உதவியோடு கடவுள்களை அணுகவேண்டும் என்கிறது நமது பக்தி மார்க்கம். அது எப்படி என்று தெரியாமல் தவித்து வரும் மக்களுக்கு இந்த யாகம் நிச்சயம் வழிகாட்டும். அனைவரும் இதில் பங்குகொண்டு சிறப்படைய பிரார்த்திக்கிறோம்!