மேற்கு நோக்கிய லிங்கம்
மேற்கு நோக்கிய லிங்கம்
எல்லா தலங்களிலும் உள்ள சிவன் கோயில்களில் சிவலிங்கம் கிழக்கு திசை நோக்கியே காட்சி தருவார். ஆனால் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சிவபெருமான் வழக்கத்திற்கு மாறாக மேற்கு பார்த்தபடி காட்சி தருகிறார்.
சிவன் கோயில்களில் சடாரி
பொதுவாக பெருமாள் கோயில்களில்தான் பக்தர்களின் தலையில் சடாரி வைத்து ஆசி வழங்கும் முறை காணப்படும். ஆனால், சில சிவதலங்களிலும் சடாரி வைக்கப்பட்டு வருகிறது. திருக்காளகஸ்தி சிவன் கோயில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், சுருட்டப்பள்ளியில் உள்ள சிவன் கோயில் ஆகிய சிறு தலங்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைத்து ஆசி வழங்கப்படுகிறது. இந்த முறை இறைவன் ஒருவனே என்பதை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
செந்தில் கோவிந்தன்
சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற உண்மையை சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் உணர்த்தவே தமிழகமெங்கும் பெரும்பாலான சிவன் கோயில்களில் விஷ்ணுவுக்குத் தனிச் சந்நதி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் அனந்தசயனாக இருக்கும் பெருமாளை, நெல்லை கோவிந்தன் என்றும், திருச்செந்தூர் முருகப் பெருமானுக்குப் பக்கத்தில் இருக்கும் பெருமானை செந்தில் கோவிந்தன் என்றும், தில்லையில் பள்ளி கொண்டு இருக்கும் பெருமானைத் தில்லைக் கோவிந்தன் என அழைப்பது வழக்கம்.
திசை லிங்கங்கள்
வந்தவாசி அருகில் உள்ள பொன்னூர் திருத்தலத்திலுள்ள சிவன் கோயிலில், எட்டு திசை பாலகர்களான இந்திரன், அக்னி, எமன், நிருதி, வாயு, வருணன், குபேரன், ஈசானன் ஆகியோர் எட்டுதிக்கு லிங்கங்களாகக் காட்சியளிக்கிறார்கள்.
புற்று வடிவில் சிவன்
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கிராமத்திற்கு அருகில், ஆவராணி புதுச்சேரி என்ற தலம் உள்ளது. இங்கு அகிலாண்டேஸ்வரி உடனுறை நடேஸ்வரர் கோயில் கொண்டுள்ளார். லிங்க வடிவமில்லாமல் சுயம்புவாக சிவன் புற்று வடிவில் தரிசனம் தருவது சிறப்பு. பார்வதி பத்ரகாளி உருவெடுத்து ஈசனை வழிபட்டு வந்தாள். அம்பாள் தனி சந்நதியில் எட்டு கரங்களுடன் வீற்றிருக்கிறாள். சிவனுக்கு நடைபெறும் சிறப்பு ஆராதனைகள் எல்லாம் காளியம்மனுக்கும் நடைபெறுகின்றன. அதேபோல காளிக்கு நடைபெறும் பூஜைகள் மூலவருக்கும் உண்டு.
சினம் தணித்த சரபேஸ்வரர்
சிவபெருமான், சரபேஸ்வரர் வடிவில் அருள்புரியும் தலம் கும்பகோணம் - மயிலாடுதுறை பேருந்து மார்க்கத்திலுள்ள திருபுவனம் ஆகும். சரபேஸ்வரர் வடிவம் சிவன், காளி, துர்க்கை, விஷ்ணு ஆகிய தெய்வங்களை உள்ளடக்கியது. இரண்யனை வதம் செய்ய திருமால் நரசிம்ம அவதாரத்தை எடுத்தார். இரண்யனை அழித்த பிறகும் கோபம் தணியாமையால் காணப்பட்டன. தேவர்கள், சிவபெருமானை அணுகிமுறையிட்டதை தொடர்ந்து நரசிம்மத்தை அடக்க அதனைவிட வலிமையான சரப வடிவத்தை மேற்கொண்டார். கோபத்தையும் அகற்றினார். பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளிடமிருந்து விடுதலை பெற பக்தர்கள் சரபேஸ்வரரை வழிபடுகின்றனர்.
இரண்டு அம்பிகையுடன் சிவன்
பொதுவாக ஒரு சந்நதியில் ஒரு அம்பிகைதான் இருப்பார். ஆனால், திண்டுக்கல் அருகேயுள்ள ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில், ஒரே சந்நதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி என இரண்டு அம்பிகையரை தரிசிக்கலாம். இங்கு சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரிய ஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும் மாலையில் பைரவர். மீதும் விழுவது சிறப்பு.
அனந்தபத்மநாபன்