திருவந்திபுரம் லட்சுமி ஹயக்ரீவர்
இறை பல ரூபங்களில் பல்வேறு ஸ்தலங்களில் அருளை அருளுகின்றது. நாம் அதைப் பெறுவதற்கான பாக்கியம் நமக்கு வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு இறை ஸ்தலங்களும் ஒவ்வொரு அருளை வைத்து நமக்கு அருள் செய்கின்றது. அதனை, தேடிச்சென்று பெறுவது நமது சிந்தனையே ஆகும். அவ்வாறாக, கிரகங்கள் நாமங்களாக தெய்வங்களை வழிகாட்டுகின்றன. அதனை தேடி பெறுவது ஜோதிடத்தின் சூட்சுமம் என்றால் நிச்சயம் மிகையில்லை.பிரளய காலத்தில் உலகம் அழியும் சமயம் பிரம்மாவின் தூக்கத்தில் உதித்த அசுரர்கள் வேதங்களை ஒரு பெண் குதிரை வடிவமாக்கி பிரளய வெள்ளத்தில் அதல பாதாளத்தில் ஒழித்து வைத்தனர். பின்பு, பிரம்மா வேதங்களை மீட்டெடுக்க மஹா விஷ்ணுவிடம் வேண்டினார். அந்த வேதங்களை மீட்டெடுக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் `பரிமுக' பெருமாள். இதனை ஹயமுகன், என்றும் அழைக்கின்றனர். ஹயக்ரீவர் வேதங்களை மீட்டு வந்ததால் ஞானத்துக்கு அதிபதியாக விளங்குகிறார்.
ஆஞ்சநேயர் சஞ்சீவி பர்வத மலையை தூக்கிக் கொண்டு இலங்கைக்கு சென்றார். அதிலிருந்து விழுந்த ஒரு ஔஷதகிரிதான் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள தூப்புல் கிராமமாகும். இங்கிருந்த வேதாந்த தேசிகர் என்பவர் தனக்கு ஞானம் வேண்டி கருட பகவானை நோக்கித் தவம் செய்கிறார். அச்சமயம் கருடபகவான் ஞானத்திற்கு அதிபதியான ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார். அதன்படி, ஹயக்ரீவரும் அருள்பாலித்தார். பின்பே பல நூல்களை எழுதினார் வேதாந்த தேசிகன். இவர் பிரதிஷ்டை செய்த தெய்வம்தான் லெட்சுமி ஹயக்ரீவர்.ஹயக்ரீவர் என்ற தெய்வத்திற்கு கேது, புதன், சுக்ரன், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளது. `ஹய' என்பதற்கு குதிரை என்று பொருள். `க்ரீவ' என்பதற்கு கழுத்து என்று பொருள்படுகிறது. கழுத்திற்கு மேல் உள்ள குதிரை என்றும் பொருள்படும்.
* பூரம், விசாகம் நட்சத்திர நாளில் தேனும் ஏலக்காய் மாலையும் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து, அந்த தேனையும் ஏலக்காயும் குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு படிப்பார்கள்.* புனர்பூசம் நட்சத்திர நாளில் வல்லாரைக் கீரை மற்றும் கருணைகிழங்கும் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து அதனை எடுத்துக் கொண்டால் பி.எச்டி வரை படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.
* வளர்பிறை தசமி திதி அன்று காலை விஸ்வரூப தரிசனம் செய்து சுவாமிக்கு தேனும், ஏலக்காய், பன்னீர் ஆகியவற்றை நெய்வேத்தியம் செய்தால் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை நிச்சயம் காண்பார்கள்.
* பூரம் நட்சத்திர நாளில் உஷத்காலத்தில் பன்னீர் ரோஜா குல்கந்து கொடுத்து காலை 7 மணிக்கு சுவாமியை தரிசனம் செய்தால் மனநிலை சீராக அமையும், தொழில் முன்னேற்றம் உண்டாகும் குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.
* புதன், சனி, சூரியன் இணைவுள்ள ஜாதகர்கள் மருத்துவத் துறையில் உள்ளவர்கள் சாயா ரக்ஷா காலத்தில் சுவாமியை தரிசனம் செய்து குதிரை அல்லது கருப்பு நிற பசுவிற்கு உணவு தானம் வழங்கினால் மேன்மேலும் வளர்ச்சி அடைவார்கள்.
* திருமணம் ஆகாதவர்கள் அல்லது தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு உள்ளவர்கள் அர்த்தஜாம பூஜையின் போது கலந்து கொண்டால் திருமண தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும் மற்றும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். இவ்வாறாக பல சக்தி வாய்ந்த திருத்தலமாக உள்ளது திருவந்திபுரம் லட்சமி ஹயக்ரீவர் திருத்தலம்.