நட்சத்திரப் பொருத்தங்கள்
அப்போது பொருத்தம் என்பது என்ன? ஏன் அவற்றை பார்க்க வேண்டும்? இதிலும் பெண்ணுக்குத்தான் ஜோதிடத்தில் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்ணினுடைய நட்சத்திரத்தைக் கொண்டுதான் ஆணின் நட்சத்திரத்தோடு பொருந்தி வருகிறதா என்கிற அளவிலேயே கணக்கீடும் செய்து வைத்துள்ளனர். சிலருக்கு உப்புமாவும், பூரியும் பிடிக்கும். ஆனால் அவர்கள் குடல் அதை ஏற்றுக் கொள்ளாது. மீறி சாப்பிட்டால் உபத்திரவங்கள்தான் அதிகரிக்கும். அதுபோல எல்லா நட்சத்திரங்கள் ஒன்றுபோல இருக்காது. அவற்றுள்ளும் வெவ்வேறு குண வேறுபாடுகள் உண்டு. அஞ்சு விரலும் ஒரே மாதிரி இருக்குமா என்று எளிமையாக கேள்வி கேட்கிறார்களல்லவா. அதுபோலத்தான் நட்சத்திரங்களும் விதம் விதமான முறையில் இயங்குகின்றன. தங்களுக்குள் பிடித்த, பிடிக்காத விஷயங்களை கொண்டிருக்கின்றன. ‘‘ஒரே வயித்துல பொறந்தவங்கதான்... ஆனா ஒரு விஷயத்துலயாவது ஒத்துப் போறாங்களா'' என்று கேள்விப் படுகிறோமல்லவா. உலகின் இயற்கையே இப்படித்தான். தன்னுடன் சேரத் தகுதியை உடையது. தகுதி பெறாதது என்று நட்சத்திர பரியந்தம் முரண்பாடுகளை கொண்டிருக்கிறது. இல்லையெனில் காலதேவனின் லீலைகள் நடைபெறாது.
இருபத்தேழு நட்சத்திரங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவற்றின் குணநலன்களைக் அடிப்படையாகக் கொண்டு மூன்றாக பிரித்துக் கொள்ளலாம். முதலில் டேக் இட் ஈசி ஸ்டார்ஸ் என்று இருக்கும் நட்சத்திரங்களாக பரணி, ரோகிணி, திருவாதிரை, ஆயில்யம், ஹஸ்தம், கேட்டை, மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி போன்றவை விளங்குகின்றன. அடுத்து சீரியஸ் ஸ்டார்ஸ்களாக அஸ்வினி, புனர்பூசம், பூரம், மகம், உத்திரம், கன்னி, சித்திரை, அனுஷம், அவிட்டம், மிதுன மிருகசீரிஷம், கிருத்திகை போன்றவை இருக்கின்றன. டேக் இட் ஈஸியாகவும், இல்லாது மிகவும் சீரியஸாகவும் இல்லாமல் நியூட்ரலாக சில நட்சத்திரங்களாக மிதுன மிருகசீரிஷம், பூரம், துலாம், சித்திரை, விசாகம், பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி தங்களை வெளிப் படுத்திக் கொள்கின்றன. இதைத்தான் ராட்சசம், சாத்வீகம், தாமசம் என்று மூன்றாக ஜோதிடம் பிரித்து வைத்துள்ளது. அந்தந்த அலைவரிசை கொண்ட நட்சத்திரத்தோடு அவைகளை சேர்க்க வேண்டும் என்பதுதான் பொருத்தத்தின் அடிப்படையான விஷயம். டேக் இட் ஈசி நட்சத்திரக்காரர் ஜோக் அடித்தால் அதே நட்சத்திரக்காரர் கூடுதலாக விழுந்து விழுந்து சிரிப்பதை பார்க்கலாம்.
‘‘ஸார்... அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும். உங்களை மாதிரி எப்போ பார்த்தாலும் சிரிச்சு கிட்டே இருக்கணுமா ‘‘என்ன என்று சீரியஸ் ஸ்டார் உள்ளவர்கள் அவர்களுக்குள் சப்போர்ட் செய்வதை உற்றுக் கவனித்தால் தெரிந்து கொள்ளலாம். வீட்டுக்கு போயிட்டேன். ஆபீஸ்பத்தி நினைச்சு கூட பார்க்க மாட்டேன். எவ்ளோ டென்ஷன் இருந்தாலும் எல்லாத்தையும் ஆபீஸ்லயே மூட்டை கட்டி வச்சுட்டுதான் போவேன் என்று நீயுட்ரல் ஸ்டார் இருப்போர்கள் தங்களுக்குள் சொல்லி வைத்தாற்போல் பேசுவதை கவனித்திருக்கிறீர்களா. இதுபோன்ற சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள் வரை அலசி ஆராய்ந்து பொருத்தங்களாக வைத்திருக்கிறார்கள் நம்
முன்னோர்கள்.
இதுக்குத்தான் பொருத்தமா என்றும் கேட்கலாம். இல்லை. பள்ளியில் படிக்கும்போது அறுபது நண்பர்கள் புடைசூழ இருப்பீர்கள். காலேஜ் வரும்போது அதில் இருபது பேர்கள் நண்பர்களாக தொடர்ந்தால் அதுவே அதிகம். திருமணத்தின்போது அதில் ஐந்து பேர் நட்போடு வந்தால் அது ஆச்சரியம். நிறைய பேரிடம் எவ்வளவு பேசினாலும் பழகினாலும் கடைசி வரை அந்தரங்கமாக பேசுவதும், பழகுவது, விஷயங்களை பகிர்ந்து கொள்வதும் ஓரிருவராகத்தான் இருக்க முடியும். அதிலும் இறுதி வரை வருவது வாழ்க்கைத் துணை என்று வரும் ஒருவர்தான். பழகிப் பார்த்து நண்பர்களை புரிந்து கொள்ளலாம். பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்ளலாம். ஆனால், வாழ்க்கைத் துணையாக வரும் ஆணிடமோ, பெண்ணிடமோ பழகிப் பார்க்கிறேன். பிடிக்கிறது என்றால் மணம் செய்து கொள்கிறேன் என்று கூறமுடியுமா. நம் சமூக அமைப்புதான் ஏற்றுக் கொள்ளுமா? அதனால்தான் பொருத்தத்தை நட்சத்திரங்களின் அடிப்படையில் வைத்திருக்கிறார்கள்.
பயோடேட்டா பார்த்தும், ஸ்டேட்டஸ் பார்த்தும் பிரமிக்காதீர்கள். ஊரே வியந்து நடந்த திருமணங்கள் அதிவேகமாக பிரிந்து சென்றதை பார்த்திருக்கிறேன். காலணா காசு இல்லாமல் வெறும் பொருத்தங்களை நம்பி ஜெயித்துக் காட்டிய தம்பதியரையும் அறிவேன். இன்று காசும், பணமும் பெரிதாகத் தெரியலாம். அதெல்லாம் வெறும் பாஸிங் க்ளவுட்தான். ஆனால், நட்சத்திர பொருத்தங்கள் உடும்பிப்பிடி போன்றது. எத்தனை வளைத்தாலும் உடையாதது. நீங்கள் பார்ப்பது பயோடேட்டாவை. ஆனால், நட்சத்திரங்கள் பார்ப்பது இறுதி வரை வரும் வாழ்க்கையை. எல்லாவற்றையும் காட்டிலும் மிக முக்கியமானது. நல்ல மனைவிக்கும், கணவனுக்கும் ஒருவர் ஆசைப்படுதலே ஆகும். அப்படி ஆசைப்பட்டதை அடைவதற்குத்தான் கோயில்கள். மோட்சத்திற்கு மட்டுமல்ல இறைவன். மணமாக வேண்டுமே என்று ஆசைப்படுவோருக்கும் சேர்த்துத்தான் ஆலயங்கள். அப்படித்தான் பொருத்தமான ஜாதகங்கள் அமையவும் கோயில்கள் உள்ளன.
இறைவனும், இறைவியும் திருமணக் கோலத்தில் அருளும் எல்லா தலங்களுமே நல்ல வரனை அருளும் வல்லமை பெற்றவை. தாயே உனக்கு அமைந்த கணவரைப் போன்று எனக்கும் அருளுங்கள் என்று பிரார்த்தனை செய்யுங்கள். மேலும், அகத்தியர் தரிசித்த சிவன், பார்வதி கல்யாண கோலத்தை தரிசியுங்கள். வேதாரண்யம், திருநல்லூர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரேஸ்வரர் என்று இதர தலங்களுக்கு செல்லலாம். ஏனெனில் வேதாரண்யம், திருநல்லூர், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கத்திற்குப் பின்னால் சிவனும், பார்வதியும் சேர்ந்து அமர்ந்து கல்யாண கோலத்தில் காட்சி கொடுப்பார்கள். இதை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்ல வரன் அமைந்து மணவாழ்க்கை சிறக்கும்.