பேரறிவைப் பொழியும் சரஸ்வதி தலங்கள்
கூத்தனூர்: தமிழகத்தில் சரஸ்வதிக்கென்று அமைந்துள்ள பழம்பெரும் ஆலயம் கும்பகோணம், காரைக்கால் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தனூர். ஹரிநாதேஸ்வரம் மற்றும் அம்பாள்புரி என்ற திருநாமத்துடன் விளங்கிய இவ்வூரை இரண்டாம் ராஜராஜன் தன் அவைக்களப் புலவரான ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கினான். கூத்தனுடைய ஊராகி ‘கூத்தனூர்’ என்று மாறியது.
புருஷோத்தமன் என்ற சிறுவன் பிறவி ஊமை. அவன் தினமும் ஹரி நதியில் நீராடி சரஸ்வதி தேவியை வணங்கினான். ஒருநாள் தேவி அவன் முன் தோன்றி, அவனது வாயில் தான் தரித்திருந்த தாம்பூலத்தை அருளி நல்லாசி புரிந்து மறைந்தாள். அன்று முதல் ஊமையாயிருந்த புருஷோத்தமன் கவிபாடும் ஆற்றலைப் பெற்றான். சரஸ்வதி மீது பல பாடல்களைப் பாடினான். அதனால் பாரதி என்ற பெயர் அவனுடைய பெயருடன் சேர்ந்து ‘புருஷோத்தம பாரதி’யானான். பின்னாளில் ஒட்டக்கூத்தர் என்றழைக்கப்பட்ட புருஷோத்தம பாரதி, சோழ மன்னர்களின் அரசவையில் அவைப்புலவராக பெருமையுடன் விளங்கினார்.
கூத்தனூர் ஆலயத்தில் சரஸ்வதி தேவி கருவறையில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். திருச்சுற்று, இத்திருக்கோயிலின் முக மண்டபத்தின் இடது பக்கத்தில் தேவியின் அருள் பெற்ற ஒட்டக்கூத்தர் வலக்கையில் எழுத்தாணியும் இடக்கையில் ஏடும் கொண்டு அமர்ந்திருக்கிறார்.அர்த்த மண்டபத்தில் விநாயகர், லிங்கம், முருகப்பெருமான் ஆகியோர் காட்சி தருகின்றனர். பலி
பீடத்தருகில் வலம்புரி விநாயகரும், திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் நர்த்தன கணபதியும் இடம் பெற்றுள்ளனர்.
கர்ப்ப கிரகத்தில் பிரம்ம தேவரின் துணைவியான சரஸ்வதி தேவி தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்து அருள்புரிகிறாள். தேவியின் திருக்கரங்களில், பின் இரு கரங்களில் ஜபமாலையும் கமண்டலமும் இடம் பெற்றிருக்க முன் இரு கரங்களில் ஏடும், சின்முத்திரையும் இடம் பெற்றுள்ளன. ஜடா மகுடத்துடன் கூடிய இவளுக்கு மூன்று கண்கள் உண்டு. எல்லாவிதமான ஆபரணங்களுடன் அழகுடையவளாக புன்னகைப் பூக்கும் கருணைத் திருமுகத்துடன் தன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
நவராத்திரியில் ஒன்பது நாளும் இத்திருக்கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜையன்று கருவறையில் குடி கொண்டுள்ள சரஸ்வதி தேவியின் திருப்பாதங்கள் கருவறையின் வெளியிலுள்ள அர்த்த மண்டபம் வரை நீண்டிருக்குமாறு அலங்காரம் செய்யப்படுகிறாள். இதன்மூலம் தேவியின் திருப்பாதங்களுக்கு பக்தர்களே நேரடியாக அர்ச்சிக்க முடியும்.
சிருங்ககிரி சாரதை: பரந்து விரிந்த பாரத நாடெங்கும் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்திய ஆதிசங்கரர், திசைக்கு ஒன்றாக, நான்கு பீடங்களை நிறுவினார். கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, வடக்கே பத்ரி, தெற்கே சிருங்கேரி என அவர் அமைத்ததில் முதலாவதாகத் திகழ்வது சிருங்கேரி.
சிர்ங்க கிரி என்பதே சிருங்கேரி என்றானது. தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இந்த யாகத்தை விபாந்தக முனிவரின் புதல்வர் ரிஷ்யசிருங்கர் நடத்தினார். இவர்
வாழ்ந்த பகுதியே சிருங்கேரி. இவருக்கு சிருங்கேரியில் கோயிலும் உள்ளது. சாரதா தேவி சரஸ்வதியின் அவதாரம். ஆசார்ய சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவளும், புலன்களை அடக்கி அவை மீண்டும் வெளிப்போகாமல் காக்கும் ஆற்றல் நிறைந்த துறவிகளால் வணங்கப்படுபவள். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய எல்லாப் பேறுகளையும் அளிப்பவள்.
ஆதிசங்கரர் சிருங்கேரியில் மடத்தை ஸ்தாபனம் செய்தது முதல் அங்கே சாரதையாக அமர்ந்து அனுக்கிரகித்து வருபவள் கலைவாணியே. சாரதா தேவி சர்வாலங்கார பூஷிதையாக இடது காலை மடித்து, வலது காலைத் தொங்க விட்டு நான்கு கரங்களுடன் அழகும் அருளும் கூடிய சாந்த தேவியாகக் காட்சி தருகிறாள். ஓலைச்சுவடி ஒரு கரத்தில், ஒரு கரம் அபயஹஸ்தம், ஒரு கரத்தில் கிளி; மற்றொன்றில் கலசம். சிருங்கேரி சாரதாம்பிகைக்கு நவராத்திரியில் விசேஷ அலங்காரம் உண்டு. சுக்கு, வெல்லம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோயிலின் மேற்குப் பிராகாரத்தில் பத்துக் கரங்களுடன் சக்தி கணபதி அருள்புரிகிறார். வெண்மை நிறத்துடன் சடையில் சந்திரனைத் தரித்து நான்கு கரங்களுடன் சாரதை தட்சிணாமூர்த்தியாகத் திகழ்கிறாள். ஞானத்தை அருள்பவளாக விளங்கும் சரஸ்வதியே சாரதையாக வழிபடப்படுகிறாள்.
பத்மநாபபுரம்: கம்பர் தமிழ்நாட்டிலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது தான் வணங்கிய சரஸ்வதி தேவியின் திருவுருவையும் தன்னுடன் எடுத்து வந்தார். அச்சிலையே இன்று பத்மநாபபுரம்
கோட்டையின் உள்ளே நிறுவப்பட்டுள்ளது. பத்மாசனத்தில் காட்சி தரும் இப்பெருமாட்டி நவராத்திரி உற்சவத்தின் போது திருவனந்தபுரம் எழுந்தருளுகிறார். அன்றைய தினத்தினை தமிழகம் மற்றும் கேரள எல்லையில் இரு மாகாண மக்களும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
கங்கை கொண்ட சோழபுரம்: தஞ்சைப் பெரிய கோயிலும் கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயிலும் ஒரே மாதிரியாகவே அமைக்கப்பட்டுள்ளன. இரு கோயில்களிலும் சரஸ்வதி தேவி வீற்றிருக்கிறாள். கங்கை கொண்ட சோழபுரத்தில் வடக்குக் கோயிலின் மாடத்தில் மேற்கு நோக்கிய நிலையில் நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் ஞான சரஸ்வதியாக எழுந்தருளியிருக்கிறாள். ஞான நூல்கள் 14 எண்ணிக்கை என்பதால், சரஸ்வதி 14 இதழ் தாமரையில் முனிவர்கள் புடை சூழ அமர்ந்துள்ளாள். சரஸ்வதி தேவி யோகத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் காட்சி தருகின்றாள்.
காஞ்சிபுரம்: முக்தி தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பழம்பெரும் திருக்கோயில்களில் ஒன்று கச்சபேஸ்வரர் திருக்கோயில். இங்கு சியாமளா தேவி தனிச் சந்நதி கொண்டு விளங்குகிறாள். சரஸ்வதி சிவனை வழிபட்டு அருள் பெற்ற தலம். தன் திருக்கரங்களில் வீணை, கிளி, பாசம், அங்குசம், குயில், தாமரை, நீலோத்பலம், மலரம்பு, கரும்புவில் ஆகியவற்றை ஏந்திய நிலையில் காட்சி தருகிறாள்.
திருக்கண்டியூர்: சிவத்தலம், பாடல் பெற்ற திருத்தலம். திருவையாறு தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இத்தலத்தில் பிரம்மதேவனின் ஐந்தாவது தலை கொய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக இத்தல ஈசர் பிரம்மசிரக்கண்டீசர் என்று அழைக்கப் படுகிறார். மூலவருக்கு பக்கத்தில் பிரம்ம தேவனும் சரஸ்வதி தேவியும் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளனர். இங்குள்ள பிரம்மதேவர் தாமரை, ஜபமாலை ஏந்தியும் அவருடைய வலப்புறம் சரஸ்வதி தேவி சர்வாலங்கார பூஷிதையாகக் காட்சி தருகிறாள்.
மகி