பேச்சுத் திறன் அருளும் பெருமான்!
சூரனை சம்ஹாரம் செய்த பின்னர், அந்த தோஷம் நீங்குவதற்காக, சிங்காரவேலனாகிய முருகன், சிவபிரானின் தலங்களுக்கு சென்று வணங்கி வழிபட்டார். திருச்செந்தூர், கீழ்வேளூர், திருமுருகன்பூண்டி, வைத்தீஸ்வரன் கோயில் என்ற அந்தத் திருத்தலங்கள் வரிசையில் திருப்பெருவேளூரும் ஒன்று. முருகப்பெருமான் நீராடிய சரவண தீர்த்தம் என்னும் தீர்த்தக்குளம் இவ்வாலயத்தின் பின்புறம் உள்ளது.
வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே ஒரு முறை ‘யார் பெரியவன்?’ என்று போட்டி. அதில் மேரு மலையின் சிகரம் ஒன்று தூள் தூளாக உடைந்து, ஒரு பகுதி இத்தலத்தில் விழுந்ததாக ஐதீகம். அதுவே காலப்போக்கில் சுயம்பு லிங்கமாக வெளிப்பட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. எனவே, இத்தலத்து இறைவனை வழிபட்டால், கயிலை மலையையே வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு ஐந்து கலசங்களுடன் கூடிய மூன்று நிலை ராஜகோபுரம். கோபுர நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால், தரைத்தளத்தில்
பலிபீடம், கொடி மரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. நந்தி தேவரை வணங்கிவிட்டு நிமிர்ந்தால் கட்டுமலை போன்ற பிரமாண்ட அமைப்பு. கட்டுமலையின் இடதுபுறம் அமைந்துள்ள 18 படிகளில் ஏறி மேலே சென்றால், முதலில் சோமாஸ்கந்த மூர்த்தி சந்நதி. அவரை வணங்கிவிட்டு, வலதுபுற வாயில் வழியே நுழைந்தால் மகா மண்டபம். அதில் தெற்கு பார்த்த திருக்கோலத்தில் நடராஜர் சிவகாமி அம்மையுடன் காட்சி தருகிறார். மண்டபத்தின் உள்ளே நுழைந்தால், கருவறையில் கிழக்கு நோக்கி மூலவர் அபிமுக்தேஸ்வரர் சிவலிங்க வடிவில் காட்சி அருள்கிறார். இவருக்கு பிரிய ஈஸ்வரர் என்றும் பெயருண்டு.
கீழ் பிராகாரத்தில் கன்னி மூலையில் பிரதான விநாயகரை தரிசிக்கலாம். அவரை அடுத்து வைகுந்த நாராயணப் பெருமாள் சந்நதி உள்ளது. இந்தப் பெருமாள் தாருகா வனத்தில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அடக்கும் வகையில் ‘மோகினி அவதாரம்’ எடுத்தவர் என்றும், தன்னுடைய பெண் வடிவத்திலிருந்து மீண்டும் ஆண் உரு பெற இத்தலத்து இறைவனை வழிபட்டார் என்றும் தலபுராணம் கூறுகிறது.
அடுத்து சுப்பிரமணியர் வள்ளி-தெய்வானையுடன் வீற்றுள்ளார். இவர் அருணகிரிநாதரால் பாடப் பெற்றவர். இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு, இங்கே இரண்டு சண்டிகேஸ்வரர்கள் சந்நதி இருப்பதுதான். முருகப்பெருமான் சந்நதியை அடுத்து, கிழக்கு நோக்கிய நிலையில் யோக சண்டிகேஸ்வரர் சந்நதியும், கோமுகத்தின் அருகில் ஒரு சண்டிகேஸ்வரரும் அருட்பாலிக்கின்றனர். துர்க்கைக்கும் தனிச் சந்நதி உள்ளது.
இறைவியின் பெயர் ராஜராஜேஸ்வரி. பொதுவாக சிவாலயங்களில் அம்பிகை நின்ற கோலத்தில்தான் இருப்பார். இங்கு அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகிறார். இதே போல் காஞ்சிபுரம் மற்றும் திருமீயச்சூரிலும் தேவி அமர்ந்த நிலையில்தான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆலயத்துள் கிழக்கு கோஷ்டத்தில் உள்ள சரஸ்வதீஸ்வரர், சரஸ்வதியால் பூஜிக்கப்பட்டவர். பேச்சுத் திறனுக்கு அருள்பாலிப்பவள் சரஸ்வதி என்பதால், இங்கு சரஸ்வதீஸ்வரர் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
இந்த லிங்கத்தை முன்னொரு காலத்தில் வாழ்ந்த பக்தர் ஒருவர் தினந்தோறும் பக்திப் பரவசத்துடன் வழிபட்டு வந்துள்ளார். அவரது ஒரே மகன் பேசும் திறனின்றி இருந்தான். அதனால் தினமும் தன் மகனை சரஸ்வதீஸ்வரரை வழிபட, அந்த சிறுவனுக்கு பேசும் திறன் வந்தது. பேசும் திறன் இல்லாதவர்கள் மற்றும் திக்குவாய் குறைபாடு உள்ளவர்கள் சரஸ்வதீஸ்வரரை வந்து வழிபட்டால், விரைவில் அந்தக்குறை நீங்கப் பெறுவர் என்பது பல பக்தர்களின் நம்பிக்கை. மேலும், குறை தீர்ந்தவர்கள் லிங்கத்திற்கு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கிழக்குப் பிராகாரத்தில் பைரவர், காலபைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள் உள்ளனர்.
இத்தலம் சுக்கிர தோஷப் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. அசுர குரு சுக்கிராச்சாரியார் ஒருமுறை தனது சக்திகள் அனைத்தையும் இழந்தார். இத்தலத்தில் உள்ள சரவணப் பொய்கையில் நீராடி, அம்பிகையை நோக்கித் தவம் செய்தார். அன்னையின் அருளால் சுக்கிராச்சாரியாருக்கு மீண்டும் அனைத்து சக்திகளும் பரிபூரணமாகக் கிடைத்தன. சுக்கிர தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமையிலும், பெளர்ணமி திதியிலும் அம்பாளை பிரார்த்தனை செய்கிறார்கள். மணக்கால் அய்யம்பேட்டையில் வீற்றிருக்கும் இக்கோயிலுக்கு நன்னிலத்திலிருந்தும், திருவாரூரிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
மகி