சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா...
கார்த்திகை மாதச் சிறப்பு
கார்த்திகை மாதம் பிறந்தாலே, எங்கெங்கும் ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் விண்ணைப் பிளக்கிறது. சபரிமலை சந்நிதானத்தை நோக்கி விரத மிருந்த பக்தர்கள் கூட்டம் அலையலையாகச் செல்கிறது. இது சகல ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் தான் சிவபெருமான் ஜோதியாக எழுந்தார். விஷ்ணுவும் ஜோதி சொரூபமாக தோன்றினார். (காஞ்சியில் திருத்தண்காவில் விளக்கொளி பெருமாளாகத் தோன்றினார்.) இரண்டு ஒளியும் சேர்ந்து மணிகண்ட ஜோதியாக பிரகாசிக்கும் இந்த மாதத்தின் முதல் நாளில் சபரிமலை விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்று முதல் 41 நாட்கள் ‘‘மண்டல விரதம்’’ இருக்க வேண்டும்.
மாலை போடுவது எப்போது? எத்தனை நாள் விரதம்?
கார்த்திகை மாதம் முதல் நாள் (17.11.2025 - திங்கள் கிழமை) மாலை அணிந்து விரதம் இருக்க வேண்டும். அப்படி வாய்ப்பு இல்லாவிட்டால் அடுத்து வரும் சனிக்கிழமை அல்லது உத்தர நட்சத்திரம் வரும் நாளில் மாலை அணியலாம். குருநாதரின் கையால் ருத்ராட்ச மாலை அல்லது துளசி மணி மாலையை வாங்க வேண்டும். தீஷா வஸ்திரமும் வாங்க வேண்டும். இவைகளை அணிந்தபின் கோயிலை வலம் வந்து தேங்காய் உடைத்து வழிபட வேண்டும் இன்னொரு விஷயமும் உண்டு. சபரிமலைக்கு முதல் முறையாகச் செல்பவர்கள் பதினெட்டாம் படியில் ஏற வேண்டும் என்பதற்காக பம்பையில் நீராடி உடனே இருமுடி கட்டுகின்றனர். இது சரியான முறை அல்ல. 48 நாள் (ஒரு மண்டலம் என்பார்கள்) விரதம் இருக்க வேண்டும். ஒருகாலத்தில் 60 நாள் விரதம் இருந்தார்கள். கார்த்திகை, மார்கழி முடிந்து, தையில் மகர ஜோதி பார்த்து விரதத்தை முடிப்பார்கள். ஒருவேளை 48 நாட்கள் விரதத்திற்கு முன்னதாக சபரிமலை செல்ல நேர்ந்தால், ஊர் திரும்பி மகர விளக்கு முடியும் வரை, விரதத்தைத் தொடர வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். வீட்டில் மாலை அணிவதாக இருந்தால் தாயார் கையால் மாலை அணிந்து கொள்ள வேண்டும். துக்க விஷயம் போன்ற காரணங்களால் மாலையைக் கழற்ற நேர்ந்தால் அடுத்த வருடம் மறுபடி முறையாக மாலை அணிந்து செல்ல வேண்டும்.
பின்பற்ற வேண்டிய விதிகள்
கடுமையான விரதம் என்று அஞ்சுவார்கள். பழகிவிட்டால் அற்புத அனுபவமாக இருக்கும். மாலை போட்டவர்கள் கடுமையான பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் பச்சை தண்ணீரில்தான் குளிக்க வேண்டும் என்பது நியதி. உடல்நிலை சரியில்லை என்பவர்கள், தண்ணீரின் குளுமையை குறைத்து, சற்று வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். நெற்றியில் சந்தனம், விபூதி, குங்குமம் போன்ற மங்கலச் சின்னங்களை அணிந்து கொள்ள வேண்டும். ஐயப்பனின் திருவுருவப் படத்திற்கு புதிதாக மலர் அணிவித்து, தினமும் ஏதாவது நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். மிக எளிமையாக ஏதாவது ஒரு பழம் வைத்து வழிபடலாம். சரணம் சொல்லி வழிபட வேண்டும். சுத்த சைவமாக இருந்து இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். சாந்தமாகப் பேச வேண்டும். பார்க்கும் அனைவரையும் ஐயப்பனின் ரூபமாகப் பார்க்க வேண்டும் பேசுவதற்கு முன்பும் சரி, பேசி முடித்த பிறகும் சரி ‘‘சுவாமி சரணம்’’ என சொல்ல வேண்டும்.
செய்யக் கூடாதவைகள்
என்ன செய்வது என்பதைவிட, என்ன செய்யக் கூடாது என்பதில் கவனம் தேவை. சந்தேகம் இருந்தால் அனுபவமிக்க குருமார்களிடம் ஆலோசனை பெற வேண்டும் கோபம் கூடாது. தகாத வார்த்தைகள் கூடாது. சண்டை போடக் கூடாது. காலணி கண்டிப்பாக அணியக் கூடாது. அலுவலக கட்டுப்பாடு காரணமாக வண்ண உடை அணிய முடியாமல், காலணி அணிய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் தாராளமாக அணிந்து கொள்ளலாம். மாலையும் நீராடி பூஜை செய்ய வேண்டும். இரவு உறங்கும் போது தரையில் தான் படுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக ஒரு பாய் வாங்கி அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கன்னி பூஜை
சபரிமலை யாத்திரைக்குச் செல்லும் புதிய சாமிகளை கன்னி சாமி என்பர். அவர்களுக்கு வழிகாட்டி நடத்திச் செல்லும் சாமிகளை குருசாமிகள் என்று சொல்லும் வழக்கம் உண்டு. முதல்முறையாக சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கன்னி பூஜை என்னும் சடங்கு நடத்திச் செல்வார்கள். இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழி பூஜை என்று சொல்வார்கள். பொதுவாக கார்த்திகை மாதம் முதல் தேதியில் ஆரம்பித்து மார்கழி மாதம் 11-ஆம் தேதிக்குள் இச்சடங்கு நல்ல நாள் பார்த்து நடத்த வேண்டும். வீட்டில்தான் இதனைச் செய்ய வேண்டும். ஒரு தனி பகுதியை தூய்மையாக வைத்து அங்கே ஐயப்பன் படம் வைத்து, விநாயகர், மாளிகைபுறத்து அம்மன், கருப்பஸ்வாமி, கடுத்தை சுவாமி, ஆழிக்குரிய இடங்களை ஒதுக்கி விளக்கேற்ற வேண்டும். எல்லா தெய்வங்களுக்கும் அவல் பொரி, வெற்றிலை பாக்கு, சித்திரான்னங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். மிக முக்கியமாக பக்தர்களுக்கு அவசியம் அன்னதானம் செய்ய வேண்டும்.
அன்னதானம் செய்ய வேண்டும்
ஐயப்பனுக்கு “அன்னதான பிரபு” என்றொரு நாமம் உண்டு. அதிலும் கன்னி சாமியாக இருப்பவர்கள், வீட்டில் அன்னதானம் அளிப்பது மிகவும் விசேஷமானது. உறவுகளையும் சக கன்னி சாமிகளையும் அழைத்து, பஜனை பாடி, பூஜை செய்து, ஐயப்ப பிரசாதத்தை அன்னதானமாகச் செய்ய வேண்டும். இதை அவரவர்கள் சக்திக்கு ஏற்றபடி செய்யலாம். ஐயப்பனை தினமும் பூஜை செய்துவிட்டு வெளியில் செல்லும்போது தினமும் உங்களால் முடிந்த அளவு ‘அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா’ என்று சொல்லி உணவு வழங்குங்கள். இது ஐயப்பனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் அன்னதானப் பிரபு. அன்னதானத்தில் மகிழ்பவன். அன்னதானம் செய்வோரை வாழச் செய்பவன்.
குருசாமி யார்?
சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருந்து 18 முறை தொடர்ச்சியாகச் சென்றவர்கள் குருசாமி எனப்படுவார்கள் (ஒரே ஆண்டில் 18 முறை செல்லக் கூடாது) 18 ஆண்டுகள் மகர விளக்கு அல்லது மண்டல பூஜைக்கு இருமுடி கட்டி 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்றவர்கள் குருசாமி தகுதியைப் பெறுவார்கள் இவர்கள் குரு சாமியாக இருந்து மற்ற பக்தர்களுக்கு மாலை அணிவிக்கலாம் சபரிமலை அல்லாத நாட்களிலும் வீட்டில் இவர்கள் நித்திய பூஜையை சுவாமிக்கு செய்ய வேண்டியது அவசியம்.
மாலை போடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம
இரு முடிப் பொருட்கள்
ஒரு துணிப் பையில் இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் ஐயப்பன் சந்நதிக்குத் தேவையான பூஜை பொருட்களையும், ஒரு பகுதியில் தங்களுக்கு வேண்டிய உணவு முதலிய அத்தியாவசியப் பொருட்களையும் ஒன்றுக்கு ஒன்று கலக்காமல் கட்டிக் கொள்ள வேண்டும். அதற்குமுன் யாத்ரா தானம் உண்டு. யாத்திரை புறப்பட்டு விட்டால், எக்காரணத்தை முன்னிட்டும் ஐயப்பன் தரிசனம் கிடைக்கும் வரை, அந்த மூட்டையை கீழே வைப்பதோ யாத்திரையில் இருந்து திரும்ப வருவதோ கூடாது. இருமுடியில் உள்ள பொருட்கள் மஞ்சள் பொடி 100 கிராம் (மலை நடை பகவதி, மஞ்சள் மாதாவுக்காக) சந்தன பாக்கெட், குங்கும பாக்கெட், நெய் தேங்காய் ஒன்று, சுத்தமான பசு நெய், விடலைத் தேங்காய் ஐந்து, (எருமேலி சபரி பீடம், சரங் குத்தி, பதினெட்டாம் படி ஆழி), கற்பூர பாக்கெட், பச்சரிசி. இந்த பொருட்களை பாலித்தீன் பைகளில் கொண்டு சென்று அங்கங்கே வீசி விட வேண்டாம்.
பயணத்தின் போது....
மலைக்குக் கிளம்பும்பொழுது ஐயப்பனின் திருவடிகளில் மனம் முழுமையாக ஒன்றுபட்டு யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் ஆங்காங்கே குளிக்கும்போது நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். போகும்போது வழியிலோ, திரும்பி வரும்போதோ பிற தெய்வங்களின் கோயில்களுக்குச் செல்பவர்கள் அந்தந்த கோயில் விதிகளை மதிக்க வேண்டும். பொது அமைதிக்கு பங்கம் வராமலும், மற்றவர்கள் வழிப்பாடு தங்கள் செயல்களால் கேடாமலும் கவனமாகவும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அந்தந்த மூர்த்திகளை வணங்குங்கள். அந்தக் கோயில் மரபு அனுமதிக்காத செயல்களைச் செய்ய வேண்டாம். யாத்திரை தரிசனம் முடிந்து மாலையைக் கழற்றிய பின்னும் விரத விதிகளில் முக்கியமான விதிகளைக் கடைபிடிப்பது நல்லது.
சபரிமலை விரத விழா
துருவன் என்னும் குழந்தைக்கு தெய்வம் வந்தது. பிரஹலாதன் என்ற குழந்தைக்கு தெய்வம் வந்தது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். தெய்வங்களும் குழந்தை வடிவில் வரவே ஆசைப்படுகின்றன. குருவாயூரப்பன், கண்ணன், முருகன் என்று வரிசையாகச் சொல்லாம். அதனால் குழந்தைத் தெய்வங்களையும், குழந்தைகளையே தெய்வங்களாகவும் கொண்டாடும் மரபு நமக்கு உண்டு. கண்ணனுக்கு ஒரு கிருஷ்ண ஜெயந்தி, விநாயகருக்கு ஒரு விநாயகர் சதுர்த்தி முருகனுக்கு பங்குனி உத்திரம், கந்த சஷ்டி முதலிய விழாக்கள் வரிசையில் குழந்தை தெய்வமான மணிகண்டனுக்கு ஏற்பட்ட ஒரு அற்புதமான விழா தான் கார்த்திகை ஐயப்பன் மாலை அணிந்து சபரிமலை செல்லும் விரத விழா.
மகிஷி எனும் அரக்கி
பெரும்பாலும் புராணங்களில் ஒரு கதையோடு தொடர்புடைய இன்னொரு கதை வந்து விடுகிறது உதாரணமாக ஹிரண்யாக்ஷன் என்கின்ற அசுரனை வராக அவதாரம் எடுத்து திருமால் அழித்தார். அடுத்து அந்த ஹிரண்யாக் க்ஷனுடைய அண்ணன் ஹிரண்ய கசிபு வந்துவிட்டான். அவனை நரசிம்ம அவதாரம் எடுத்து பகவான் வதம் செய்தார். அதைப்போலவே மகிஷாசுரன் என்ற அரக்கன் தவம் செய்து யாராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றான். ஆனால், பராசக்தி மகிஷாசுரனை மர்த்தனம் (வதம்) செய்து மகிஷாசுரமர்த்தனி என்ற பெயரைப் பெற்றாள். அந்த மகிஷாசுரனின் சகோதரி மகிஷி சகோதரனுடைய இறப்புக்கு பழி தீர்க்க தவம் செய்து, ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் பிறந்த குழந்தையால்தான் தனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கேட்டாள். அவளை அழிக்க ஹரிஹரசுதனாக அதாவது திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் அருள் குழவியாக அவதரித்தவன் தான்
ஐயப்பன்.
ஐயப்பன் யார்?
பாண்டிய வம்சத்தில் வந்த அரசன் ராஜசேகரன். பந்தள நாட்டை ஆண்டு வந்தான். அவனுடைய மனைவியின் பெயர் கோப்பெருந்தேவி. சிவனையும் விஷ்ணுவையும் அவர்கள் ஆராதனை செய்தனர். அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. ஒருநாள் பம்பை நதியோரம் அரசன் உலாவச் செல்லும் பொழுது ஓர் அழகான ஆண் குழந்தையைக் கண்டெடுத்தான். பிள்ளையில்லா குறை தனக்கு தீர்ந்து போனதாக பெருமகிழ்ச்சி கொண்டான். குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்ற பெயரை வைத்தான். குழந்தையின் மீது அரசனும் அரசியும் பாசத்தைப் பொழிந்தார்கள். மணிகண்டன் வந்த நேரமோ என்னவோ கோப்பெருந்தேவி கருவுற்றாள். ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ராஜராஜன் என்று பெயர் வைத்தார்கள். இரண்டு குழந்தைகளுமே வளர்ந்தார்கள். ஆனால், நாள் செல்லச் செல்ல அரசிக்கு தானே தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த குழந்தையின் மீது பாசம் அதிகரித்தது.
முதலில் இருமுடி கட்டியவர்
மணிகண்டன் காட்டுக்குப் போகும் போது, அவனுடைய தந்தை ராஜசேகரன், வழியில் ஏற்படும் இன்னல்களில் இருந்து காத்துக் கொள்ள மூன்று கண்களுடைய சிவபெருமானின் அடையாளச் சின்னமான தேங்காய் ஒன்றை எடுத்துச் செல்லும்படி கூறுகிறார். மணிகண்டன் நீளமானதொரு துணி ஒன்றை எடுத்துக்கொண்டு அதனுள்ளே அவல், பொரி, தேங்காய் முதலிய உணவு பொருட்களை வேண்டிய அளவுக்குக் கட்டிக் கொண்டான். வில்லும் அம்புகளும் எடுத்துக் கொண்டான். இருமுடிக்கட்டை தலைமீது சுமந்து கொண்டு அரண்மனையை விட்டுப் புறப்பட்டான். அன்னை தலை நோவுக்கு மருந்தாக புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் சென்ற மணிகண்டன், அன்று சுமந்து சென்ற இருமுடிக் கட்டைத்தான், இன்றும் சபரிமலைக்குப் பயணம் செய்யும் பக்தர்கள் சுமந்து செல்கிறார்கள். இதற்குப் பிறகு மகிஷியின் வதமும் நடக்கிறது.
கண்ணனும் மணிகண்டனும்
கண்ணனுடைய வாழ்க்கையில் நடந்தது போலவே மணிகண்டன் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடைபெற்றது கண்ணன் தனக்கு கல்வி தந்த சாந்திபினீ முனிவரின் குழந்தையைக் காப்பாற்றி அவருக்கு குரு தட்சணையாக கொடுத்தார் என்று வரலாறு. அதைப்போலவே மணிகண்டன் (ஐயப்பன்) தன்னுடைய ஆசிரியருக்கு என்ன குரு தட்சணை தர வேண்டும் என்ற போது, அந்த ஆசிரியர் ‘‘என்னுடைய பையன் பிறவியில் இருந்தே ஊமையாகவும் செவிடாகவும் இருக்கின்றான். அவனுடைய வாழ்க்கை இனிப் பிரகாசம் அடையச் செய்ய வேண்டும். அதுவே நீ எனக்கு அளிக்கும் குரு தட்சணை” என்றார். குருநாதரின் அந்த வேண்டுகோளை உடனடியாக ஏற்றுக் கொண்ட மணிகண்டன் தனது தெய்வீக அருள் சக்தியினால் குருநாதரின் ஊமை மகனைப் பேச வைத்தான். கேட்க வைத்தான் நல்வாழ்வு அளித்தான்.
பெரிய பாதை
ஆரம்ப காலத்தில் ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருந்து வனப்பகுதி வழியாக நடந்து சபரிமலை சென்றடைந்தனர். சபரிமலை யாத்திரையின் உண்மையான அனுபவத்தைப் பெற, ஏறத்தாழ 50 கி.மீ தூரம் கொண்ட இந்தப் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று இன்றும் நம்பப்படுகிறது. இந்த பாதை ‘பெருவழி பாதை’, ‘பெரியபாதை’ அல்லது ‘நீண்ட பாதை’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய பாதை என்பது எருமேலி, பேரூர் தோடு, காளை கட்டி, அழுதை, அழுதை நதி, கல்லிடுங்குன்று, இஞ்சிப்பாறை- உடும்பாறை, முக்குழி, தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் போன்றவற்றைக் கடந்து பம்பையின் அடிவாரத்தைச் சென்றடையும். காளைகட்டியில் வெடி வழிபாடு செய்து பக்தர்கள் வணங்குவார்கள். அழுதாநதி நீராடி கல்லெடுப்பார்கள். பின்னர் அழவைக்கும் அழுதா மலையில் செங்குத்தாக ஏறுவார்கள். அழுதாநதியில் எடுத்த கற்களை கல்லிடும் குன்றில் வீசி வணங்குவார்கள். இஞ்சிப்பாறைக் கோட்டை, அழுதா மலை இறக்கம் கடந்து, முக்குழி தாவளத்தில் உள்ள மாரியம்மனை வழிபடுவார்கள். கரிவலந்தோடு தாண்டி கதறவைக்கும் கரிமலை ஏற்றம்... இறக்கம் கடந்தால் வருவது பெரியானை வட்டம், சிறியானை வட்டம். இவற்றைக் கடந்தால் பம்பை நதி குறுக்கிடும். இங்கு நீராடி, பூஜைகள் செய்த பின்னரே யாத்திரையைத் தொடங்குவார்கள். இங்கிருந்து தொடங்குவதுதான் சிறிய பாதைப் பயணம்.
சபரிமலை கோயில் அமைப்பு
கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் 1535 அடி உயரத்தில் உள்ளது. கோயில் சிறியது. ஆனால், அழகானது. இயற்கை சூழலில் அமைந்தது. ஐயப்பனின் கருவறை ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் நீளவாக்கில் அமைந்துள்ளது. அந்த நீண்ட சதுரத்தின் மீது கொட்டகை போட்டது போன்று தங்கத் தகடுகள் தட்டையாக இல்லாமல் இரண்டு புறமும் சாய்ந்தது போல் இருக்கும். இந்தக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் முன் பகுதியில் இடது, வலதாக அமைந்த ஓட்டு வீடு போன்ற நுழைவாயில் உள்ளது. உயரமான ஒரு பெரிய முதல் மாடியில் அமைந்துள்ள கோயிலாக அமைந்திருப்பதால் சரங்குத்தி வந்தவுடனேயே கோயில் நம் கண்ணில் தென்படும். 18 படிகள் உண்டு. விரதம் இருப்பவர்கள் மட்டும் 18 படியேறி ஐயப்பனை தரிசிக்கலாம். இப்போது உள்ள ஐயப்பனின் திருக்கோவில் பழமையான கோயில் இருந்த இடத்தில் எழுப்பப் பெற்ற கோயிலாகும்.
பதினெட்டாம் படி
சபரிமலை என்றாலே பதினெட்டாம்படி நினைவுக்கு வந்துவிடும். பதினெட்டாம் படியேறி தரிசனம் செய்வது தான் முறையான தரிசனம். ஆனால், அந்த 18 படிகளை ஏற வேண்டும் என்று சொன்னால், முறையான மண்டல பூஜையும் விரதமும் இருக்க வேண்டும். விரதமும் பூஜையும் முறையாக இல்லாதவர்கள் எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும் பதினெட்டாம் படி ஏறி தரிசனம் செய்ய முடியாது. இந்திய சமய நெறிகளில் பதினெட்டு என்கின்ற எண் மிக உயர்வானது. புராணங்கள் பதினெட்டு. பகவத் கீதையின் அத்தியாயங்கள் 18. மகாபாரதப் போர் நடந்த தினம் 18. மகாபாரத பருவங்கள் 18. சித்தர்களின் எண்ணிக்கை 18. தமிழில் கீழ்க்கணக்கு நூல்கள் 18. பதினெட்டுப் படி ஏறிவரும் பக்தர்கள் ஐந்து கர்மேந்திரியங்களையும், ஐந்து ஞானேந்திரியங்களையும், அன்னமயகோசம் முதலான ஐந்து கோசங்களையும், சத்வ, ரஜோ, தமோ குணங்கள் ஆகியமூன்று குணங்களையும் கடந்து உள்ளுறையும் ஆத்மனையே ஐயப்பனாகத் தரிசிக்கிறார்கள்.
என்ன தத்துவம் 18 படிகளுக்கு?
ஐயப்பன் கோயிலில் 18 படிகளுக்கு மேல், தத்துவமசி என்ற மகா வாக்கியம் எழுதப்பட்டுள்ளது. இதை தத்-துவம்-அஸி என பிரித்து படிக்க வேண்டும். ‘‘நீ எதை தேடி வந்தாயோ அது உன்னிடமே உள்ளது’’ என்பது தான் இதன் பொருள். அதுவே நீ என்பதாகும். ஐயப்பன் என்ற சொல்லுக்கு நான் உனக்குள் இருக்கிறேன் என்பது தான் பொருள். அனைத்து ஆன்மாவோடு கலந்துள்ள இறைவனை உணர்ந்து, இறை நிலைக்கு மனிதன் உயர வேண்டும் என்ற மகா தத்துவத்தை உணர்த்துவது தான் ஐயப்ப விரத மற்றும் வழிபாட்டின் முக்கிய அம்சமாகும்.
வாழ்வை உயர்த்தும் 18 படிகள்
தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட கவசத்தால் மூடப்பட்ட 18 படிகளிலும் 18 தேவதைகள் அருள் செய்கின்றன. இந்த 18 படிகளும் வாழ்க்கை மற்றும் 18 வகையான குணங்களை குறிப்பதாகவும், இவற்றில் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை சேர வேண்டும் என்பதே 18 படிகளின் தத்துவம். 18 படிகளில் ஏறும் போது, 18 படிகளை கடந்த ஐயப்பனை தரிசிக்கும் போதும் என்ன வேண்டிக் கொள்கிறோமோ அது அப்படியே நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 18 படிகள் உணர்த்தும் தத்துவம்.
முதல் படி - பிறப்பு நிலையற்றது
இரண்டாம் படி - சாங்கிய யோகம்
மூன்றாம் படி - கர்ம யோகம்
நான்காம் படி - ஞான யோகம்
ஐந்தாம் படி - சன்னியாசி யோகம்
ஆறாம் படி - தியான யோகம்
ஏழாம் படி - ஞான விஞ்ஞான யோகம்
எட்டாம் படி - அட்சர பிரம்ம யோகம்
ஒன்பதாம் படி - ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
பத்தாம் படி - விபூதி யோகம்
பதினொன்றாம் படி - விஸ்வரூப தரிசன யோகம்
பன்னிரெண்டாம் படி - பக்தி யோகம்
பதிமூன்றாம் படி - சேஷத்ர விபாக யோகம்
பதினான்காம் படி - குணத்ரய விபாக யோகம்
பதினைந்தாம் படி - புருஷோத்தம யோகம்
பதினாறாம் படி - தைவாசுரஸம்பத் விபாக யோகம்
பதினேழாம் படி - ச்ராத்தாதரய விபாக யோகம்
பதினெட்டாம் படி - மோட்ச சன்னியாச யோகம்
வேறு அர்த்தங்களும் உண்டு. இது ஒரு கோணம். ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டல கால விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து ஒவ்வொரு படிகள் மீது ஏற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள்.
சபரிமலை பூஜைகள்
சபரிமலையில் ஒவ்வொரு மாதமும் பூஜை உண்டு. ஆங்கில புதுவருட நாளுக்கு முன் தினம் மகரவிளக்கு பூஜை தொடங்கும். தை மாதம் ஒன்றாம் தேதி மகர விளக்கு. ஒவ்வொரு மாதமும் நான்கு முதல் ஐந்து நாட்கள் மாத பூஜைகள் நடைபெறும். பங்குனி மாதத்தில் உத்திரத் திருவிழா தொடங்கும். கொடியேற்றம் நடந்து ஆராட்டு விழா நடைபெறும். சித்திரை மாத முக்கியமான விழா சித்திரை விஷு. வைகாசி மாதத்தில் வைகாசி மாத பூஜையும் பிரதிஷ்டை தின விழாவும் நடைபெறும். ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மாத பூஜைகள் நடைபெறும். ஆவணி மாதத்தில் திருவோணம் பூஜை நடைபெறும். புரட்டாசி மாதம், ஐப்பசி மாத பூஜை நடந்து சித்திரை ஆட்டத் திருநாள் விழா இரண்டு நாள் நடைபெறும். மிக நீண்ட நாள் நடை திறந்து இருப்பது கார்த்திகை மாத மண்டல பூஜையின் போது தான்.
பம்பையும் மகர ஜோதியும்
சபரிமலை செல்வதற்கு இரண்டு பாதைகள் உண்டு. இரண்டு பாதையும் சந்திக்கும் இடம் பம்பை நதி. இந்தப் பகுதிக்கு மேலுள்ள மலைதான் சபரி மலை. இங்கிருந்து சபரிமலை ஏழு கிலோமீட்டர். இங்கே நீராடிவிட்டு தான் சபரிமலைக்குச் செல்லவேண்டும். பம்பை ஆற்றின் கரையோரம் ஒரே கல்லில் இரண்டு பாதங்கள் இருக்கின்றன. அதை பக்தர்கள், ‘ராம பாதம்’ என்று சொல்லி வழிபடுகிறார்கள். மகர விளக்கு பூஜைக்கு முன்னால் பம்பா உற்சவம் என்ற உற்சவம் இந்த நதியில் நடக்கும். விளக்கு உற்சவம் என்பார்கள். பெரிய இலைகளில் நெய்விளக்கு ஏற்றி ஜெகஜோதியாக ஆற்றில் மிதக்க விடப்படும் ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி அன்று, பந்தள அரண் மனையில் இருந்து ஐயப்பனின் ஆபரணங்கள் கொண்டு வரப்பட்டு, சுவாமிக்கு அணிவிக்கப்படும். அப்படி நகைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்படும் போதும் பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவமாக ஐயப்பன் காட்சி தருவார். இந்த மகரஜோதியை காண்பது பாவங்கள் அனைத்தையும் போக்கக் கூடியது. ஐயப்ப வழிபாட்டில் பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுவது மகரஜோதி தரிசனத்தை தான்.
திருவாபரணம்
ஐயப்பனுக்கு மட்டும் அன்றி மாளிகைபுரத்தம்மனுக்கும் திருவாபரணம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஐயப்பனுக்கு ஆபரணம் சாத்தி பூஜை நடக்கும்போது மாளிகை புரத்தம்மனுக்கும் பூஜை நடத்துவர். மகரஜோதி விழா முடிந்த பிறகும் ஆறுநாள் நடை திறந்திருக்கும். அப்போது விழாவின் நாயகியான மாளிகை புரத்தம்மன் ஐயப்ப சுவாமியை திருமணம் செய்ய வேண்டும் என்ற வார்த்தையில் ஆசையில் சரக்குத்தி வரை பவனி வருவாள்.
எஸ். கோகுலாச்சாரி