பெண்கள் மட்டுமே மேற்கொள்ளக் கூடிய நோன்புதான் காரடையான் நோன்பு. இதனால் மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம். மாசி மாதம் ஏகாதசியை ஒட்டி வரும் இதனை காமாட்சி நோன்பு என்றும் கூறுவர். சாவித்திரி தனது கணவன் சத்தியவான், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இந்நோன்பினை கடைபிடித்தாள். வெற்றியும் கண்டாள்.காஞ்சி காமாட்சி கம்பா நதி தீர்த்தத்தில் ஈசனை மண்ணினால் லிங்கம் செய்து பூஜித்தாள். அப்பொழுது பிரளயம் வந்தது. அந்தப் பிரளயத்திலிருந்து சிவலிங்கத்தைக் காப்பாற்ற இந்த விரதத்தைச் செய்ததால் ஈசன் விரத மகிமையால் அம்பாளுக்கு தரிசனம் தந்து திருக்கல்யாணம் செய்து கொண்டார். காமாட்சி-ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தால் இந்த விரதத்திற்கு காமாட்சி விரதம் என்று பெயர்.
கலசம் ஒன்றில் தேங்காயுடன் மாவிலைகள், சந்தனம், குங்குமம், பூ ஆகியவற்றை வைத்து மஞ்சள் கயிற்றினைக் கலசத்தின் கழுத்தில் கட்டி விட வேண்டும்.அதிகாலையில் எழுந்து குளித்து கார அடை ெசய்து பழம், பொரி முதலானவற்றை வைத்து மஞ்சள் கயிற்றினைக் கலசத்தின் முன் வைத்து தீபாராதனை செய்து வழிபட வேண்டும். ‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்பது வழக்கு. இப்பண்டிகையில் திருமாங்கல்ய சரடினை மாற்றிக்கொள்ள வேண்டும்.கார அடை, குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துண்டு ஆகியவற்றை சுமங்கலிப் பெண்களுக்கு தர வேண்டும். மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். உபநயனம் செய்து கொள்வதும், நோன்புக் கயிறு அணிவதும் நன்மை தரும்.
- டி.லதா, நீலகிரி.