அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர்
மஹாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு அவரை அடக்கிய மஹாவிஷ்ணு. அவரின் உயிரை பறித்த தோஷம் நீங்க சிவபெருமானை வேண்டினார். அப்பொழுது சிவபெருமான் தோன்றி பூலோகத்தில் தன்னை வழிபட்டு வர தோஷம் நீங்கப் பெறும் என்றார்.
அதன்படி, பல தலங்களுக்கு சென்று மஹாவிஷ்ணு சிவபெருமானை வழிபட்டார். அப்படி, அறகண்ட நல்லூரில் வழிபட்ட பொழுது சிவபெருமான காட்சி தந்து விமோசனம் கொடுத்தார். மஹாவிஷ்ணு தாயாரை பிரிந்து தனியே வந்ததால் ஸ்ரீ தேவியும் மஹாவிஷ்ணுவை தேடி இத்தலத்திற்கு வந்ததால் இவ்விருவருக்கும் சிவபெருமான் காட்சி தந்தார்.
பிற்காலத்தில் நீலகண்டர் என்ற முனிவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் வேண்டி சிவதல யாத்திரை சென்றார். அவர் திருவண்ணாமலை செல்லும் வழியில் தென்பெண்ணை ஆற்றில் நீராடி சிறு குன்றாக இருந்த இத்தலத்தில் அமர்ந்தார். அப்போது தூரத்தில் இருந்த திருவண்ணாமலையை தரிசித்த முனிவருக்கு இத்தலத்திலேயே சிவனை வழிபட வேண்டி ஆவல் உண்டாகவே, சிவபெருமானை வேண்டி இத்தலத்தில் தவம் செய்து வழிபட்டார். அவருக்கு மனமிரங்கிய சிவபெருமான் அம்பாளுடன் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்து அருளினார்.
நீலகண்ட முனிவர் தனக்கு இவ்விடத்தில் அருள் செய்தது போல இங்கு வரும் அனைவருக்கும் அருள்புரிய வேண்டும் என வேண்டினார். அவருக்காக சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். அவர் ‘அறையணிநாதர்' என்று அழைக்கப் பெற்றார்.
அறை என்றால் பாறை என்றும் அணி என்றால் அழகு என்றும் பொருளுடன் பாறையில் அழகாக அமர்ந்தவர் என சிவபெருமானுக்கு நாமம் உண்டானது.
பாண்டவர்கள் தங்களின் வனவாசத்தின்போது இங்கு தங்கியிருந்து வழிபட்டுள்ளனர்.
ஸ்ரீ ரமண மகிரிஷி இந்த ஸ்தலத்தில்தான் திருவண்ணாமலை அண்ணாமலையாரின் தெய்வீக தரிசனத்தைப் பெற்றார்.
திருஞானசம்பந்தர் சமணர்களால் மூடப்பட்டிருந்த கோயிலை பதிகம் பாடி திறந்து வைத்தார்.
அப்பர், சேக்கிழார், கபிலர் போன்ற எண்ணற்ற அடியார்களால் பாடல் பெற்ற திருத்தலமாக உள்ளது சிறப்பாகும்.
இத்திருத்தலத்தில் அழகிய பொன்னழகி உடனுறை அதுல்யநாதேஸ்வரர் நாமகரணமாக உள்ளது. இந்த நாமத்திற்கு வியாழன், சந்திரன், சுக்ரன், சனி, சூரியன் கிரகங்கள் பங்கு வகிக்கின்றன.
* பௌர்ணமி நாளில் தென்பெண்ணை ஆற்றில் நீராடி ஐந்து வகை இனிப்புகளை படைத்து சுவாமி தரிசனம் செய்து அங்கு வருவோருக்கு தானம் கொடுத்தால், இழந்த சொத்துகள் மீண்டும் கிடைக்கப் பெறலாம்.
* ஜாதகத்தில் இரண்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் தனஸ்தானம் பலம் பெற தென்பெண்ணை ஆற்றில் நீரை எடுத்து வந்தோ அல்லது பன்னீரில் அபிஷேகம் செய்தால் தனம் தடையில்லாமல் கிடைக்கப் பெறுவர்.
* இரண்டாம் பாவகத்தில் சந்திரன் இருக்கப் பெற்றவர்கள் திங்கட்கிழமை விரதம் இருந்து கடலில் நீர் எடுத்து அதனை பாலுடன் சேர்த்து பன்னீரும் அதனுடன் சேர்த்து அபிஷேகம் செய்தால் பொருளாதாரம் உயரும்.
* பௌர்ணமி நாளில் இங்கு மகாவில்வ செடியை நட்டு சுவாமியை வழிபாடு செய்தால் செடி வளர வளர உங்கள் தோஷங்கள் மற்றும் சாபங்கள் கரைந்து போகும்.