ஜெலன்ஸ்கி நினைத்தால் ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும்: அதிபர் டிரம்ப் கருத்து
வாஷிங்டன்: ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு வாஷிங்டனில் நடைபெறுகிறது. டிரம்ப் பதிவு செய்த கருத்துகள் குழப்பத்தை அதிகரித்துள்ளன. உக்ரைன் - ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இதற்காக, ரஷ்ய அதிபர் புதினை கடந்த 15ம் தேதி சந்தித்து பேசினார். அலாஸ்காவில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது போரை நிறுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனினும், போரை நிறுத்துவதற்கான நிபந்தனைகளை புதின், டிரம்பிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இன்று டிரம்ப் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பு நடைபெற இருக்க கூடிய சூழலில், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது; அதிபர் ஜெலன்ஸ்கி நினைத்தால் உடனடியாக, அவரால் ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் அல்லது சண்டையைத் தொடர முடியும். இந்தப் போர் எப்படி தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு, ஓபாமா ஆட்சியில் ஒரு தாக்குதலும் இல்லாமல் எடுக்கப்பட்ட கிரிமீயாவை திரும்ப பெற முடியாது. உக்ரைன் நேட்டோவிற்குள் செல்ல முடியாது. சில விஷயங்கள் என்றும் மாறாது என்று பதிவிட்டுள்ளார்.