புதுச்சத்திரம் அருகே பரபரப்பு தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
*11 பைக்குகள் பறிமுதல்
புவனகிரி : கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி, சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி பிரதீப் மேற்பார்வையில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் புதுச்சத்திரம் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டி பிடித்து, அவரிடம் நடத்திய விசாரணையில், புதுச்சத்திரம் அருகே மேல்பூவாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(27) என்பதும், மேலும் இவர் பல்வேறு இடங்களில் தொடர் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், அவர் புதுச்சத்திரம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலூர், முத்தாண்டிக்குப்பம், சேத்தியாத்தோப்பு, கடலூர் முதுநகர், தூக்கணாம்பாக்கம் ஆகிய காவல் நிலைய சரக பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிந்தது.
பின்னர் அவர் அளித்த தகவலின் அடிப்படையில், ஆதிநாராயணபுரம் கிராமத்தில் கோயிலுக்கு பின்புறம் உள்ள ஒரு புதரில் மறைத்து வைத்திருந்த 5 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல புதுச்சத்திரம் அருகே உள்ள தீர்த்தனகிரி கிராமத்தில் குளக்கரை அருகில் மறைத்து வைத்திருந்த 5 பைக்குகள் என மொத்தம் 11 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.