இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு காங். எம்எல்ஏ முன்ஜாமீன் மனு தள்ளுபடி: கைது செய்ய போலீசார் தீவிரம்
திருவனந்தபுரம்: பாலக்காடு தொகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராகுல் மாங்கூட்டத்தில். இவர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகையான ரினி ஆன் ஜார்ஜ், தன்னை ஒரு இளம் எம்எல்ஏ உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு அழைத்ததாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இளம் எம்எல்ஏ யார் என்று இந்த நடிகை கூறாவிட்டாலும் பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில்தான் அந்த நபர் என்று கேரளாவில் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் ராகுல் மாங்கூட்டத்தில் எம்எல்ஏ நடத்திய ஆபாச சாட்டிங் விவரங்கள் வெளியானது. மேலும் அந்த இளம்பெண்ணை கருச்சிதைவு செய்வதற்கு அவர் மிரட்டும் ஆடியோவும் வெளியானது. இது தொடர்பாக அந்த இளம்பெண் புகார் எதுவும் செய்யாததால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த இளம்பெண் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் வலியமலை போலீசார் ராகுல் மாங்கூட்டத்தில் மீது பலாத்காரம் மற்றும் மிரட்டி கருச்சிதைவு செய்ய வைத்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இளம்பெண் புகார் கொடுத்தது தெரிந்தவுடன் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் தேடி வருகின்றனர். இதற்கிடையே ராகுல் மாங்கூட்டத்தில் முன்ஜாமீன் கோரி திருவனந்தபுரம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். கடந்த இரு தினங்களாக நடைபெற்ற இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நசீரா, ராகுல் மாங்கூட்டத்திலின் முன்ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து ராகுல் மாங்கூட்டத்திலை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.