திருப்பூரில் வசித்தபோது நடத்தையில் சந்தேகம்; இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று உடலை சாக்கில் கட்டி வாய்க்காலில் வீச்சு: மாமனார், மாமியார் கைது
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த எடமேலையூர் வடக்கு அம்பலக்கார தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா. இவரது மனைவி இளஞ்சியம் (45). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தொழிலாளியான தங்கபாண்டியன் (41) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலானது. இதையடுத்து கணவரை பிரிந்து தனது 3 மகன்கள், தங்கப்பாண்டியனுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் சென்று வாடகை வீட்டில் இளஞ்சியம் வசித்து வந்தார். இளஞ்சியத்தின் மூத்த மகன் அரவிந்தராஜ் (25) அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நாகை மாவட்டம் கூரத்தாங்குடியை சேர்ந்த சினேகா (23) என்பவரை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ஓராண்டுக்கு முன் குடும்பத்தகராறு காரணமாக அரவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டார்.
இதைதொடர்ந்து அவரது முதலாமாண்டு நினைவு தினம் கடந்த 13ம் தேதி முடிந்த நிலையில் இளஞ்சியம், தங்கப்பாண்டியன் மற்றும் மருமகள் சினேகா, அவரது குழந்தை ஆகிய 4 பேரும் கடந்த 18ம் தேதி சொந்த ஊரான எடமேலையூருக்கு வந்தனர். கடந்த 21ம் தேதி சினேகாவை அவரது தாய் தமிழ்செல்வி செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் சினேகா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தபோது எடமேலையூருக்கு சினேகா வந்து சென்றது தெரியவந்தது. இது குறித்து மன்னார்குடி டவுன் போலீசில் தமிழ்செல்வி 21ம் தேதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சந்தேகத்தின் பேரில் தங்கபாண்டியனிடம் விசாரித்தனர். அதில், திருப்பூரில் கணவர் இறந்த பின் சினேகாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. அவர் தனி குடித்தனம் செல்ல வேண்டுமென கூறி வந்துள்ளார்.
இதனால் மன்னார்குடியில் வைத்து சினேகாவை தீர்த்து கட்டுவதற்கு முடிவு செய்தனர். அதன்படி கோயிலுக்கு செல்வதுபோல் எடமேலையூர் அழைத்து வந்து இளஞ்சியத்துடன் சேர்ந்து சினேகாவை கழுத்தை நெரித்து, அடித்து கொன்று சாக்கு மூட்டையில் கட்டி சோனாப்பேட்டை பெரியாறு வாய்க்காலில் வீசி சென்றது தெரியவந்தது. இதற்காக சோனாப்பேட்டைக்கு இளஞ்சியத்தை முன்னதாகவே தங்கபாண்டியன் அனுப்பி வைத்ததும், அதன்பின்னர் சினேகாவை பைக்கில் தங்கபாண்டியன் கூட்டிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மன்னார்குடி டிஎஸ்பி மணிவண்ணன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று அந்த பகுதியில் உடலை தேடி பார்த்தனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் சினேகாவின் உடல் சேற்றில் சிக்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து இளஞ்சியம், தங்கப்பாண்டியனை நேற்று கைது செய்து மன்னார்குடி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவுப்படி தங்கப்பாண்டியனை திருச்சி மத்திய சிறையிலும், இளஞ்சியத்தை திருச்சி பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.