இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அரிச்சல்முனை வந்த இளம்பெண்: புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை
ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகில் இன்று அதிகாலை அரிச்சல்முனை வந்தடைந்த இளம்பெண்ணிடம் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் வசிப்போர் சட்டவிரோதமாக படகுகளில் தமிழகத்திற்கு தப்பி வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் டிராவல் பேக்குடன் நின்றிருப்பதாக அப்பகுதி மீனவ மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மரைன் எஸ்.ஐ காளிதாஸ் மற்றும் தனிப்பிரிவு போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அப்பெண்ணை பிடித்தனர்.
விசாரணையில் அவர் இலங்கை திரிகோணமலை மாவட்டம், ஆண்டான்குளம் பகுதியை சேர்ந்த விதுர்ஷியா (24) என்பதும், அங்கிருந்து கள்ளத்தனமாக படகில் தப்பிவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அப்பெண்ணை மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் ஒன்றிய மற்றும் மாநில புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், தலைமன்னாரில் இருந்து நேற்று நள்ளிரவு கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு அதிகாலையில் அரிச்சல்முனை வந்திறங்கியது தெரியவந்தது. படகுக்கு இலங்கை மதிப்பில் இரண்டு லட்சம் பணம் கொடுத்துள்ளார். இவரது குடும்பத்தினர் ஏற்கனவே இலங்ைகயில் இருந்து தப்பிவந்து தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் தற்போது தங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.