நேற்று மிரட்டல்... இன்று கெஞ்சல்... தயவு செய்து தண்ணீ கொடுங்க: இந்தியாவிடம் கையேந்தி நிற்கிறது பாகிஸ்தான்
புதுடெல்லி: காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்து விட்டது. இதனால் பாகிஸ்தானில் பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இரண்டாவது முறையாக பாக். ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர், அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் கூறும்போது, ‘எங்களை வீழ்த்தி விட்டதாக நினைத்தால், நாங்கள் எங்களோடு சேர்ந்து பாதி உலகையும் அழிப்போம். எதிர்காலத்தில் இந்தியா மீது எந்த ஒரு தாக்குதல் நடந்தாலும் அப்போது குஜராத்தில் உள்ளரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மீது தாக்குதல் நடத்தப்படும்’ என்று அச்சுறுத்தினார்.
அசிம் முனீரின் பேச்சு பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களை வைத்து தாக்கப்போவதாக மிரட்டும் வகையில் உள்ளது என்று இந்தியா எச்சரித்தது. இதுபற்றி ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,’நட்புமிக்க மூன்றாவது நாட்டின் (அமெரிக்கா) மண்ணிலிருந்து இதுபோன்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது. இந்தியா ஏற்கனவே அணுசக்தி அச்சுறுத்தலுக்கு அடிபணியப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இருப்பினும் முனீரின் கருத்துகள் பொறுப்பற்றவை’ என்றார்.
பாகிஸ்தானிற்கு தண்ணீர் தராவிட்டால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் என அந்நாட்டின் ராணுவத் தலைவரே மிரட்டல் விடுத்த நிலையில், தற்போது தண்ணீர் திறந்துவிடுமாறு கேட்டு, இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் இயல்பான செயல்பாட்டை உடனடியாக மீண்டும் தொடங்குமாறு பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் நேற்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது. மேலும் சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான பிரச்னையில் சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளதால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் இயல்பான செயல்பாட்டை உடனடியாக மீண்டும் தொடங்கவும் இந்தியாவை கேட்டுக்கொள்கிறோம் என்று பாக்.வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
* எங்களுக்கு வேறு வழியில்லை பிலாவல் மீண்டும் மிரட்டல்
இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தினால், பாகிஸ்தானுக்கு சண்டையிடுவதை தவிர வேறு வழியில்லை என்று முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ மற்றும் தற்போதைய பாக்.அதிபர் ஆசிப்அலி சர்தார்ஜி தம்பதியின் மகன் பிலாவல் பூட்டோ எச்சரித்துள்ளார்.