2027 உலகக் கோப்பையில் ரோகித்சர்மா, விராட்கோஹ்லி ஆடுவது சந்தேகம்: பிசிசிஐ புதிய திட்டம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெஸ்ட்இண்டீசில் நடந்த டி.20 உலக கோப்பை பைனலில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி பட்டம் வென்றது. அந்த உற்சாகத்துடன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித்சர்மா, விராட் கோஹ்லி மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் டி.20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.
அதன்பின்னர் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ்(0-3), ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 1-3 என தோல்வியால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் கேப்டன் ரோகித்சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன் டெஸ்ட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். அடுத்த ஒருவாரத்தில் விராட் கோஹ்லியும் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதையடுத்து சுப்மன் கில் தலைமையிலான இளம்வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்து கவனம் ஈர்த்தது. ரோகித்சர்மா, கோஹ்லி, அஸ்வின், ஷமி இல்லாத நிலையிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தற்போது ரோகித்சர்மா ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக உள்ளார். அவரும் கோஹ்லியும் 2027ம் ஆண்டு தென்ஆப்ரிக்காவில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடர் வரை விளையாடமுடிவு செய்துள்ளனர். ஆனால் அப்போது ரோகித்சர்மா 40 வயதை எட்டி விடுவார். கோஹ்லியும் 38 வயதை தாண்டி விடுவார். இதனால் இருவரும் உடற்தகுதியுடன் இருப்பார்களா என்பது கேள்வி குறிதான்.
மற்றொரு புறம் இளம்வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால் அதற்கு முன் இருவரும் ஓய்வை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்தியா வரும் 17ம் தேதி முதல் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒன்டே மற்றும் டி.20 போட்டியில் ஆட உள்ளது. ஆனால் இந்த தொடர் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. இந்த தொடர் ஒருவேளை ரத்து செய்யப்பட்டால் அக்டோபரில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது.
இந்த தொடரில் தான் ரோகித், கோஹ்லி ஆட்டத்தை பார்க்க முடியும். அதன்பின்னர் நவம்பரில் தென்ஆப்ரிக்கா இந்தியா வருகிறது. இதில் அந்த அணிக்குஎதிரான 3 ஒருநாள் போட்டி தொடருடன் இருவரும் ஓய்வை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஏனெனில் 2027 உலக கோப்பைக்குமுன்னதாக இந்தியா27 ஒருநாள் போட்டிகளில் ஆட திட்டமிட்டுள்ளது. 2011ம்ஆண்டுக்கு பின்னர் உலக கோப்பையை இந்தியா 3வது முறையாக கைப்பற்ற திட்டமிட்டு அணியை தயார்படுத்த வேண்டும்.
இதனால் இளம்வீரர்களை கொண்டஇந்திய அணியை உருவாக்க பிசிசிஐ திட்டம் வகுக்கும். இதனால் இந்த ஆண்டு இறுதியுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ரோகித்சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஓய்வு பெறுவார்கள் என பிசிசிஐ வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக இருவரிடமும் பிசிசிஐ விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என கூறப்படுகிறது.