உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘தொடர் நாயகி’ விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 'தொடர் நாயகி' விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறமையையும் சாதனைகளையும் அங்கீகரிக்கும் 'குஷல் கிலாடி யோஜனா' திட்டத்தின் கீழ் காவல்துறை டி.எஸ்.பி. (DSP) பதவியை வழங்கினார்.
நவி மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இத்தொடரில் சிறப்பாக விளையாடிய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தீப்தி சர்மா, 212 ரன்கள் குவித்து 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியா உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இறுதி ஆட்டத்தில் 58 ரன்கள் விளாசிய தீப்தி சர்மா, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், தொடர் நாயகி விருதையும் வென்று அசத்தினார்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் திறமைமிகு வீரர் திட்டத்தின் கீழ், தீப்தி சர்மாவை காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமித்து கௌரவிப்பதாக அம்மாநில காவல்துறை தலைவர் அறிவித்துள்ளார்.