3ம் உலக நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் அனுமதி இல்லை: அதிபர் டிரம்ப் அதிரடி
நியூயார்க்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே மிக மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது இதில் தேசிய பாதுகாப்புப் படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடுநடத்திய ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஹமத்துல்லா என்பது தெரியவந்தது. இந்நிலையில் அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில்,‘‘நாம் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியிருந்தாலும், குடியேற்றக்கொள்கை பலரின் ஆதாயங்களையும், வாழ்க்கை நிலைமைகளையும் அரித்துவிட்டது. எனவே மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருவோரை முழுமையாக நிறுத்தப்போகிறேன். தூங்கு மூஞ்சி ஜோ பைடன் எதையும் ஆராயாமல் கையொப்பமிட்டதால் அமெரிக்காவுக்குள் நுழைந்த லட்சக்கணக்கானவர் வெளியேற்றப்படுவார்கள். அமெரிக்காவை நேசிக்காத எவரையும் நீக்குவேன்.
நாட்டில் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு கிடைக்கும் அனைத்து அரசு சலுகைகள் மற்றும் மானியங்கள் முடிவுக்கு கொண்டுவரப்படும். உள்நாட்டு அமைதியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் புலம்பெயர்ந்தோரின் குடியுரிமைகள் ரத்து செய்யப்படும். பாதுகாப்பு ஆபத்து அல்லது மேற்கத்திய நாகரிகத்துடன் பொருந்தாத எந்தவொரு வெளிநாட்டினரும் நாடு கடத்தப்படுவார்கள். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கிரீன் கார்டுகளும் கடுமையாக மறுபரிசீலனை செய்யப்படும்.
கிரீன் கார்டுடன் 30ஆயிரம் டாலர் சம்பாதிக்கும் புலம்பெயர்ந்தோருக்கு தங்களது குடும்பத்துக்கு ஆண்டுக்கு 50ஆயிரம் டாலர் சலுகைகளை பெறுவார்கள். உண்மையான புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த அகதிகள் சுமை அமெரிக்காவின் சமூக சீர்குலைவுக்கு முக்கிய காரணமாகும். அமெரிக்காவிற்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கப்படாது” என்று குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் உலக நாடுகள் என்று அவர் எந்த நாடுகளையும் நேரடியாக குறிப்பிடவில்லை.