பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கம்பத்தில் கட்டி வைத்து தொழிலாளி கொடூர கொலை: மொட்டையடித்து, கால்வாயில் சடலம் வீச்சு
புழல்: செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் காட்டுநாயக்கன் நகரை சேர்ந்த பழங்குடியின கூலி தொழிலாளி மணிமாறன் (26). இவர், சாலைகளில் உள்ள பழைய பொருட்களை சேகரித்து, அவற்றை கடையில் விற்று பிழைத்து வந்தார். இந்நிலையில், செங்குன்றம் அடுத்த எல்லையம்மன்பேட்டை - ஆவடி சாலையில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு மணிமாறன் பிளாஸ்டிக் பொருட்கள் திருடச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனைக்கண்ட தொழிற்சாலை ஊழியர்கள், மணிமாறனை பிடித்து அங்கிருந்த கம்பத்தில் கட்டி வைத்து, இரும்பு ராடால் பயங்கரமாக தாக்கினர். தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அங்கு சென்றபோது, தொழிற்சாலையில் ரூ.6 லட்சம் திருடு போனதால், அதை கொடுத்தால் விட்டுவிடுவதாக கூறி, அவர்களை திருப்பி அனுப்பி உள்ளனர்.
இதனிடையே, நேற்று காலை எல்லையம்மன்பேட்டை கிராமத்தில் உள்ள கால்வாயில் மணிமாறன் மொட்டை அடிக்கப்பட்டு, ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்குன்றம் காவல் நிலைய போலீசார், மணிமாறன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த உறவினர்கள் மணிமாறனை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க தொழிற்சாலை முன்பாக போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், மணிமாறனை தாக்கி கொலை செய்த தொழிற்சாலை உரிமையாளரின் மகன் சாயாத் பருக் (34), ஊழியர்கள் அப்துல் மாலிக் (40), விக்னேஷ் (27), அசோக்குமார் (29), செல்வகுமார் (36) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தொழிற்சாலை உரிமையாளர் சலீம் ரகுமானை தேடி வருகின்றனர்.