தக்கலை அருகே தொழிலாளி கழுத்தறுத்து கொலை: போதை ஆசாமி வெறிச்செயல்
குமாரபுரம்: தக்கலை அருகே தொழிலாளி கழுத்து அறுப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தக்கலையை அடுத்த மேக்காமண்டபம் கைலாசவிளை பகுதியை சேர்ந்தவர் மணி (60). அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உண்டு. மணி, குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்தார். மேக்காமண்டபம் சந்தை பகுதியில் உள்ள கடை வாசல்களில் தான் இரவு தூங்குவது வழக்கம். அவ்வப்போது சந்தையில் கூலி வேலைக்கு சென்று, அந்த பணத்தில் பிழைப்பு நடத்தினார். நேற்று இரவும் சந்தையில் தான் படுத்திருந்தார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மேக்காமண்டபம் சந்தை, அருகில் உள்ள ஆலமரத்தின் கீழ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மணி இறந்து கிடந்தார். இது குறித்து சந்தைக்கு வந்த வியாபாரிகள் சிலர் தக்கலை இன்ஸ்ெபக்டர் கிறிஸ்டிக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து அறிந்ததும் தக்கலை, கொற்றிக்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து இறந்து கிடந்த மணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து கொற்றிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், இரவு நேரத்தில் குடிபோதையில் இங்கு கும்பல்கள் நடமாடுகிறார்கள்.
இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். எனவே போதை கும்பல் தான், மணியை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்க வேண்டும் என்றனர். மணியிடம் பணம் கேட்டு கொடுக்க மறுத்ததால் கொன்று இருப்பார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் தான் நேற்று இரவு மணியிடம் தகராறு செய்ததை சிலர் பார்த்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.