ஆயுத பூஜையை முன்னிட்டு சிங்கம்புணரியில் பொரி தயாரிக்கும் பணி தீவிரம்
சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணியில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஏராளமான தொழிலாளர்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தீபாவாளி என்றால் பட்டாசு என்பது போல் ஆயுத பூஜை உள்ளிட்ட வழிபாட்டுக்கு அவல் பொரி, முக்கியமானதாக உள்ளது. மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பொரிக்கப்படும் பொறி அதிகம் உப்புச் சுவையுடனும் சிங்கம்புணரி தயாரிக்கும் பொரி இனிப்புச் சுவையுடன் இருப்பதால் சிங்கம்புணரி பொரிக்கு என்று தனி மவுசு உள்ளது.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருளாக பொரி உள்ளது. நகர்ப்புற கிராமப்புறங்களில் பொரிக்கு என்று தனி வாடிக்கையாளர்கள் உண்டு. இனிப்பு பொரி, காரப்பொரி, மசாலா பொரி, பொரி உருண்டை என பல்வேறு விதங்களில், பொரியை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மழை காலம் உள்ளதால் பொரி விற்பனையும் இந்த காலக்கட்டத்தில் அதிகமாக உள்ளது.
மேலும் கோயில் விசேஷங்கள் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பொரிகளை வாங்கி செல்கின்றனர். பொரி தயாரிப்பதற்கு நீளமான நெல் ரகம் தேர்வு செய்யப்பட்டு ஏழு நாட்கள் பக்குவப்படுத்தி பொரி தயாரிக்கப்பட்டு வருகிறது.
சிங்கம்புணரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக பொரி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது நவீன உணவு பழக்கம் வந்ததால் பொரி சாப்பிடும் பழக்கம் வெகுவாக குறைந்தது. முன்பு கிராமங்களில் நடைபெறும் சந்தைகளில் அதிக அளவில் கிராம மக்கள் பொரி வாங்கி செல்வது வாடிக்கையாக இருந்தது. தற்போது விற்பனை குறைந்துள்ளதால் பொரி தயாரிக்கும் தொழிலாளர்கள் மாற்று தொழிலை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொரி தயாரிப்பதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதால் நெல்விலை உயர்வு, கூலி உயர்வு ஆகிய காரணங்களால் பொரி தயாரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு கடலை கூடு (பொட்டு )அடுப்புகளில் பொரி பொறிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டது. தற்பொழுது இயந்திரங்கள் மூலமாக பொரி பொறிக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.
இதுகுறித்து பொறி உற்பத்தியாளர் குழந்தைவேல் கூறும்போது, பொரி தயாரிப்பதற்கு பழைய நெல் வகைகளான பவானி, கார், வைய குண்டான் பயன்படுத்தி வந்தோம். தற்போது கோ 43, ஐஆர் 20. கர்நாடகா 64. உள்ளிட்ட நீளமான நெல் ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றை பக்குவப்படுத்தப்படும்.
முதலாவதாக நெல்லை சுடு தண்ணீர் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து அவற்றை எடுத்து மறுநாள் ஈரத்தை போக்கும் வகையில் சூடு படுத்தப்பட்டு களத்தில் உலர்த்தப்படும். அதன் பின்பு நெல் அரிசியாக மாற்றப்படும். பின்பு அரிசி மீண்டும் உப்பு மற்றும் இனிப்பு கலந்த தண்ணீரில் வைக்கப்பட்டு இரண்டு நாட்கள் பிறகு அரிசியில் உள்ள தண்ணீர் உலர்த்தப்படும்.
அதன்பின்பு நான்காவது நாள் சீனித் தண்ணீரில் அரிசி ஊறவைத்து பின்பு அதை காய வைத்து மீண்டும் பக்குவப்படுத்தி அவை பொரியாக மாற்றப்படுகிறது. இவ்வாறு நெல் பொரியாக மாறுவதற்கு ஏழு நாட்கள் உழைப்பு ஆகிறது.
முன்பு பொட்டு அடுப்புகளில் பொரி பொறிக்க அதிகளவில் ஆட்கள் தேவைப்பட்டது. தற்போது நவீன இயந்திரங்கள் மூலம் பொரி பொறிப்பதால் குறைந்த ஆட்கள் அதிக அளவில் பொரி தயாரிக்க முடிகிறது. மேலும் மேற்கு வங்கம் பகுதியிலிருந்து பொரிக்கு பக்குவப்படுத்தப்பட்ட நெல் அரிசியாக வருவதால் நான்கு நாட்கள் பக்குவப்படுத்தலிலேயே பொரியாக மாற்ற முடிகிறது.
திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஊர்களில் தயாரிக்கப்படும் பொரியானது உப்பு சுவை அதிகமாக இருக்கும். ஆனால் சிங்கம்புணரியில் தயாரிக்கப்படும் பொரி இனிப்பு சுவையுடன் இருப்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து சிங்கம்புணரி பொரியை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கூலி ஆட்கள் பற்றாக்குறை பொரிக்கான தேவை குறைவு ஆகியவற்றின் காரணமாக பொரி தயாரிக்கும் பணி குறைந்துள்ளது.
ஆயுத பூஜை வர உள்ளதால் பொரிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆர்டர்கள் கொடுக்க தொடங்கியுள்ளனர். ஒரு மூட்டை பொரி 120 லிட்டர் வீதத்தில் மூட்டையாக விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகள் பொரிகளை வாங்க சிங்கம்புணரிக்கு அதிக அளவில் வருகின்றனர்’’ என அவர் தெரிவித்தார்.
முன்பு திருச்செந்தூர், பழனி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட திருத்தலங்களில் சிங்கம்புணரி பொரி கிடைக்கும் என விளம்பரப்படுத்தி வைத்திருந்தனர். அந்த அளவிற்கு சிங்கம்புணரி பொரிக்கு ஒரு தனி சிறப்பு உள்ளது.