பெண்களின் அந்தரங்க வீடியோக்களை உடனடியாக அகற்ற நெறிமுறைகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!
சென்னை: இணையதளங்களில் பகிரப்படும் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அகற்றுவது தொடர்பாக நிலையான வழிமுறைகளை வகுத்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கல்லூரி பருவக் காதல் காரணமாக இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள தனது அந்தரங்க ஆபாச வீடியோக்களை அகற்றக் கோரி பெண் வழக்கறிஞர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், “பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது 6 இணையதளங்களில் அகற்றப்படாமல் உள்ளது. அவற்றையும் அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரினார்.
இதையடுத்து இந்த வழக்கில் ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள், நேரடியாக தங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றுவது தொடர்பாக எளிதாக அணுகும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வருவதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இது தொடர்பான ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் வகுத்து தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.