மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர்; உலக கோப்பையை வெல்வதே லட்சியம்: இந்திய வீராங்கனை ஸ்நே ராணா பேட்டி
புதுடெல்லி: ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30ம்தேதி தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் அனைத்து போட்டிகளும் நடத்தப்படுகின்றன. தொடரின் முதல் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் உலக கோப்பை தொடர் குறித்து இந்திய வீராங்கனை ஸ்நே ராணா கூறியதாவது:-
சொந்த மண்ணில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது சுவாரசியமானதாகவும், சவாலானதாகவும் இருக்கப் போகிறது. அது சிறப்பான உணர்வைத் தருகிறது. நீண்ட ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிவரும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணியில் விளையாடவுள்ளது கூடுதல் சிறப்பான விஷயம். இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்றுத் தர வேண்டும் என்பதே எங்களது நோக்கம் மற்றும் லட்சியம்.
மகளிர் பிரீமியர் லீக் வீராங்கனைகளுக்கு சிறப்பான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுடன் இணைந்து மற்றும் அவர்களுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பினை மகளிர் பிரீமியர் லீக் ஏற்படுத்திக் கொடுத்தது. வெளிநாட்டு வீராங்கனைகள் எவ்வாறு விளையாடுகிறார்கள், எவ்வாறு திட்டம் வகுக்கிறார்கள், முக்கியமான தருணங்களில் எவ்வாறு செயல்படுகிறார்கள் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுக் கொள்ள மகளிர் பிரீமியர் லீக் உதவியது. இவ்வாறு அவர் கூறினார்.