பெரம்பலூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 6 மாத குழந்தையுடன் பெண் தீக்குளித்து தற்கொலை
பாடாலூர்: பெரம்பலூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 6 மாத குழந்தையுடன் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரை அடுத்த தெரணி கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி கவிதா (24). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இவர்களுக்கு 6 மாத வள்ளுவன் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலகண்டன் பனை மரத்தில் இருந்து கீழே விழுந்து முது தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது.
பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தெரணியில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்ற கவிதா, தனது மகனுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் இன்று மதியம் வீட்டில் தனியாக இருந்த கவிதா, வீட்டை உட்புறமாக தாழிட்டு கொண்டு குழந்தையுடன் உடலுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் கதறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து, 2 பேரையும் மீட்டனர். ஆனால் கவிதா உடல் முழுவதும் கருகியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
குழந்தை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாடாலூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவர் இறந்த துக்கத்தில் கவிதா, மகனுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பாடாலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---------