சிட்னியில் நாளை கடைசி ஒருநாள் போட்டி; ஒயிட் வாஷை தவிர்க்குமா இந்தியா?.. ஹாட்ரிக் வெற்றிக்கு ஆஸி. இலக்கு
சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 2 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா வென்று ஒயிட்வாஷை தவிர்த்து ஆறுதல் வெற்றியாவது பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விராட் கோஹ்லி 2 போட்டியிலும் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த நிலையில் நாளை பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். பந்துவீச்சு பலவீனமாக உள்ள நிலையில் நாளை வாஷிங்டன்சுந்தர் அல்லது நிதிஷ்குமாருக்கு பதில் குல்தீப்யாதவ் ஆட வாய்ப்பு உள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலியா பேட்டிங், பந்துவீச்சு என பலமாக உள்ளது.
நாளை ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கும். கடைசி போட்டிக்கான ஆஸி. அணியில் மாரன்ஸ் லாபுசாக்னே நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ், சுழற்பந்துவீச்சாளர் மாட் குஹ்னெமன் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று 2வது போட்டியில் தோல்விக்கு பின் இந்திய அணி கேப்டன் கில் கூறுகையில்,நாங்கள் பேட்டிங்கில் போதுமான அளவு ரன்களை எடுத்து இருந்தோம் என்று நினைக்கின்றேன். ஆனால் பில்டிங்கில் 2 கேட்ச்களை நாங்கள் கோட்டை விட்டோம். அது தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிவிட்டது. பந்து கொஞ்சம் பழையதாக மாறியவுடன், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது, என்றார்.