தேயிலை தோட்டத்தை காட்டு மாடுகள் முற்றுகை; விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிப்பு
ஊட்டி: ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களை காட்டு மாடுகள் முற்றுகையிடுவதால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் காட்டு மாடு, சிறுத்தை, கரடி மற்றும் யானைகள் போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், இவைகள் உணவிற்காக மக்கள் வாழும் பகுதிகள், தேயிலை தோட்டம் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு வருகின்றன. குறிப்பாக, காட்டு மாடுகள் தேயிலை தோட்டங்களில் கூட்டம் கூட்டமாக வரும் இந்த காட்டு மாடுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தேயிலை தோட்டங்களுக்கு சென்று தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் தற்போது காட்டு மாடுகள் தேயிலை தோட்டங்களில் வலம் வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டி அருகேயுள்ள லவ்டேல், காந்திநகர், மைனலை மட்டம் மற்றும் பெங்கால்மட்டம் போன்ற பகுதிகளில் இந்த காட்டு மாடுகள் தேயிலை தோட்டங்களுக்குள் உலா வருவதால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சில சமயங்களில் இவைகள் விரட்டி பொதுமக்களை தாக்குவதால் தொழிலாளர்களுக்கு காயமேற்பட்டு வருகிறது. மேலும், இவைகள் தாக்கி சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் தற்போது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களுக்கு தேயிலை பறிக்கச் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் இந்த காட்டு மாடுகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.