விளைநிலங்களில் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம்; 700 வாழைகள் சேதம்: விவசாயிகள் கவலை
களக்காடு: களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் 700க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு பன்றிகள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊர் பகுதிகளில் முகாமிட்டு விளைநிலங்களை துவம்சம் செய்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம், சத்திரங்காடு விளைநிலங்களுக்குள் காட்டு பன்றிகள் கூட்டம் புகுந்தன. இதைப்பார்த்த விவசாயிகள் அவைகளை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் காட்டு பன்றிகள் நாலாபுறங்களில் இருந்தும் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் செய்வதறியாது தவித்தனர்.
இருப்பினும் சத்தங்களை எழுப்பி விரட்டினர். எனினும் காட்டு பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த 700க்கும் மேற்பட்ட வாழைகளை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தின. நாசமான வாழைகள் பயிரிடப்பட்டு 3 மாதமான ஏத்தன் ரக வாழைகள் ஆகும். இவைகள் நெல்லை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும், யூனியன் கவுன்சிலருமான தமிழ்செல்வனுக்கு சொந்தமானது ஆகும். இதுகுறித்து தமிழ்செல்வன் கூறுகையில், ‘காட்டுபன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகளின் உயிருக்கும், பயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தினசரி அவைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே காட்டு பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி அரசாணை வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். சமீபத்தில் களக்காடு வந்த வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனும் காட்டு பன்றிகள் சுட்டு கொல்லப்படும் என்று அறிவித்தார். ராபர்ட்புருஸ் எம்பியும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். ஆனால் பன்றிகளை சுட இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதுபோல காட்டு பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றார்.