சத்தியமங்கலம் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை காட்டு யானை வழிமறித்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களாக ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் சாலையில் வாகனங்களை வழி மறிப்பதோடு, கரும்பு பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை தடுத்து நிறுத்தி தும்பிக்கையால் கரும்பு துண்டுகளை பறித்து சாப்பிடுகின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை ஆசனூர் அடுத்துள்ள காரப்பள்ளம் வன சோதனை சாவடி பகுதியில் ஒரு காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பு லாரி வருகிறதா என தேடி பார்த்தது. இதனால், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் அங்குமிங்கும் சாலையின் குறுக்கே நடமாடிய காட்டு யானை பின்னர் மெதுவாக சாலையோர வனப்பகுதிக்கு சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன. தேசிய நெடுஞ்சாலையில் நடமாடும் காட்டு யானைகளால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.