மனைவி, குழந்தைகளுடன் மருத்துவர் தற்கொலை விவகாரம்; வீட்டில் இருந்து டைரி, ஆவணங்கள் பறிமுதல்: கந்து வட்டிக்கு கடன் கொடுத்த நபர்களை பிடிக்க 5 தனிப்படை
இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்னர். அதில் மருத்துவர் பாலமுருகன் தொழிலை விரிவுபடுத்த 25க்கும் மேற்பட்ட வங்கிகளில் ரூ.8 கோடி கடன் வாங்கி, அதில் ரூ.3 கோடியை திருப்பி செலுத்தி உள்ளார். மீதியுள்ள ரூ.5 கோடியை செலுத்த முடியாததால், பல்வேறு நபர்களிடம் இருந்து கந்துவட்டிக்கு ரூ.8 கோடி வாங்கிள்ளார். இதற்கு மாதம்தோறும் ரூ.25 லட்சம் வட்டி கட்டி வந்துள்ளார். ஆனாலும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடனை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொல்லை செய்ததால், வேறு வழியின்றி குடும்பத்துடன் தற்கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து, கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் குறித்து விசாரித்து, 3 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், திருமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் மருத்துவரின் வீட்டை சோதனை செய்ததில் முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கியில் கடன் பெற்ற ஆவணங்கள் மற்றும் பல்வேறு நபர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கிய விவரங்கள் அடங்கிய டைரியை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்களின் பட்டியல் தயார் செய்து, அவர்களை தேடி வருகின்றனர். இதில், போலீசார் விசாரணைக்கு பயந்து, பலர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைவானது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிப்பதற்கு அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம், நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் ஆகிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கி கடன் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.