உணவில் விஷம் கலந்து கணவரை கொல்ல முயற்சி: கள்ளக்காதலனுடன் கைதான மனைவி சிறையிலடைப்பு
அரூர்: உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து, கணவனை கொல்ல முயன்ற வழக்கில் கைதான மனைவி மற்றும் கள்ளக்காதலன் சிறையில் அடைக்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டியை சேர்ந்தவர் ரசூல் (43). தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அம்முபி (35). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில், கடந்த 5ம்தேதி இரவு, வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு படுத்த ரசூல், நள்ளிரவில் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து, கீரைப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதனை தொடர்ந்து வாய்புண், வயிற்றுவலி மற்றும் வாந்தியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த ரசூல், சேலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவரின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்த மருத்துவர்கள், பூச்சிகொல்லி மருந்து சாப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், தான் எந்த பூச்சிகொல்லி மருந்தையும் சாப்பிடவில்லை என அவர் கூறியுள்ளார். இந்நிலையில், அம்முபி கீரைப்பட்டியில் சலூன் கடை நடத்தி வரும், அதே ஊரை சேர்ந்த லோகேஸ்வரன் (26) என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பது ரசூலுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது தம்பி மனைவியிடம், அம்முபியின் செல்போனை சோதனை செய்யுமாறு கூறியுள்ளார். அவர் செல்போனை சோதனை செய்தபோது, லோகேஸ்வரனுடன் பேசிய ஆடியோ இருந்தது. அதில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பாட்டுடன் கலந்து கணவருக்கு கொடுத்ததாகவும், ஆனால் அவருக்கு அதில் ஒன்றும் ஆகாததால், மாதுளை ஜூசில் பூச்சிமருந்து கலந்து கொடுத்ததாகவும் பேசிய ஆடியோ பதிவாகி இருந்தது.
இதையடுத்து, ரசூல் தனது மனைவி அம்முபியும், அவரது கள்ளக்காதலன் லோகேஸ்வரனும் சேர்ந்து, தனக்கு உணவில் பூச்சிகொல்லி மருந்து கலந்து கொடுத்து, கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரூர் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அம்முபி, லோகேஸ்வரனை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களின் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் ரசூலை கொலை செய்யும் நோக்கத்தில் திட்டமிட்டு விஷத்தை கொடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி லோகேஸ்வரனை தர்மபுரி கிளை சிறையிலும், அம்முபியை பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.