தஞ்சையில் குடும்ப தகராறில் விபரீதம்: மனைவி விஷம் குடித்து சாவு; போலீசுக்கு பயந்து கணவரும் தற்கொலை
தஞ்சை: தஞ்சையில் குடும்ப தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணைக்கு பயந்து கணவரும் விஷம் குடித்து இறந்தார். தஞ்சை திருநகர் விஸ்தரிப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் பாபு(45). கூலித்ெதாழிலாளி. இவரது மனைவி அமுதா(42). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகள் 10ம் வகுப்பும், மகன் 4ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சுரேஷ்பாபு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் சுரேஷ் தூங்கி விட்டார்.
இந்நிலையில் விரக்தியில் இருந்த அமுதா விஷம் குடித்தார். நேற்று அதிகாலை கண் விழித்த சுரேஷ் பாபு மனைவி பேச்சு மூச்சின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அருகில் விஷ பாட்டில் கிடந்தது. அப்போது தான் மனைவி விஷம் குடித்தது தெரிந்தது. அமுதா குடித்த விஷம் போக மீதி விஷம் பாட்டிலில் இருந்தது. போலீஸ் விசாரணைக்கு பயந்து, சுரேஷ் பாபுவும் அந்த விஷத்தை குடித்தார். காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீட்டு கதவு திறக்கப்படாதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அமுதா இறந்து கிடந்தார். சுரேஷ்பாபு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இதையடுத்து சுரேஷ்பாபுவை சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறிது நேரத்திலேயே அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.