மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு தமிழ்நாட்டில் வரும் 24ம் தேதி வரைலேசான மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 24ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் 24ம் தேதி வரை வீசும். மத்திய மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் இன்று வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.