வாலாஜா அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சென்னை வாலிபர் சடலம் மீட்பு
வாலாஜா: வாலாஜா அருகே ஆற்றுக்கால்வாய் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சென்னை வாலிபர் உள்பட 2 வாலிபர்கள் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(21). இவர் சென்னை அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள டிவி உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருடன் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த அருண்(24), காவேரிப்பாக்கத்தை சேர்ந்த காந்திநாதன்(24), விக்னேஷ்(23), சுபாஷ்(26), செந்தில்(33), தினகரன்(28), தமிழன்சாமுவேல்(28), காஞ்சிபுரத்தை சேர்ந்த சாம்செல்வராஜ்(27) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால், நண்பர்கள் அனைவரும் ஒன்றாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பாலாறு அணைக்கட்டு அருகே உள்ள பூண்டி கூன்மடை பாலாற்று பகுதிக்கு மதியம் வந்தனர். அங்கு அருண், மணிகண்டன் இருவரும் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கூன்மடை ஆற்றுக்கால்வாயில் குளித்தனர். மற்ற 7 பேர் கரையில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டனும், அருணும் திடீரென வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகுடன் விரைந்து வந்து 2 வாலிபர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 8 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை. இன்று காலை 2வது நாளாக தேடும் பணியை தொடங்கினர். சுமார் 9 மணியளவில், மணிகண்டன் மற்றும் அருண் சடலங்களை மீட்டனர்.