வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் அதிகாரத்தை பறிக்கும் செயலில் பாஜ அரசு ஈடுபடுகிறது: பொன்குமார் தாக்கு
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) என்ற பெயரில் வாக்கு திருட்டு மூலம் அதிகாரத்தை பறிக்கும் செயலில் ஒன்றிய பாஜ அரசு ஈடுபட்டு வருகின்றது. பீகாரில் மோடி அரசின் வாக்கு திருட்டு குறித்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆதாரத்துடன் வெளியிட்டு மோடி அரசின் முகத்திரையை கிழித்துள்ளார். ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து எஸ்ஐஆர் என்ற பெயரில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான வாக்குகளை நீக்குதல், பாஜவுக்கு ஆதரவான வாக்குகளை சேர்த்தல் போன்ற தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு வருவதை நடுநிலையாளர்கள் பலரும் கண்டனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் இந்தப் பணி தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டு பொருத்தமட்டில் தமிழ்நாடு முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த வாக்கு திருட்டு செயலை வன்மையாகக் கண்டித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அதில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் மாநிலத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மோடி அரசின் எஸ்ஐஆர் என்ற பெயரில் நடைபெறும் வாக்குத் திருட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது குறித்து வருகிற 11ம் தேதி திமுக தலைமையில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சி முழுமையாக பங்கேற்கிறது. கட்சியினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள்.