வாக்காளர் பட்டியலில் இருந்து ஓட்டு, பெயர் மாயமாவது தொடர்ந்து நடக்கிறது: கமல்ஹாசன் பேட்டி
சென்னை: சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக மக்கள் நீதி மய்ய தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் துபாய்க்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
துபாயில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க செல்கிறேன். நான் நடித்த தெலுங்கு படத்துக்கு விருது கிடைத்துள்ளது. அதை பெற்றுக் கொள்கிறேன். பின்னர் எனது துபாய் பயணத்தை முடித்துவிட்டு, குடியரசு துணை தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக டெல்லி செல்கிறேன்.
வாக்காளர் பட்டியலில் ஓட்டு, பெயர் மாயமாவது தொடர்ந்து நடக்கிறது. எனது பெயரே சில சமயம் காணாமல் போய், பின்னர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இப்போது அதன் உச்சகட்டமாக ஒரு விஷயம் நடந்துள்ளது. இந்தியாவில் வெறிநாய் தொல்லை அதிகரிக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது மிக சுலபம். தற்போது நமக்காக பொதிகள் சுமந்து வந்த கழுதைகள் காணாமல் போய்விட்டன. இப்போது எங்குமே கழுதைகளைப் பார்க்க முடியாது. அவற்றை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது பேசுகிறார்களா. எல்லா உயிர்களையும் முடிந்தவரை காப்பாற்ற வேண்டும் என்பது என் கருத்து.
வெளிநாட்டு பயணத்தில் தமிழக முதல்வர் இதுவரை ரூ.3 ஆயிரம் கோடி முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்த்துள்ளார். இதுகுறித்து பாஜ விமர்சிக்கிறது. ஒருவர் நல்லது செய்தால், அவர் எதிர்க்கட்சி உள்பட எந்த கட்சியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். தமிழ்நாட்டுக்கு முதல்வர் நன்மை செய்திருக்கிறார். அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு குறித்து நான் மிகப்பெரிய கட்டுரை எழுதியிருக்கிறேன். அதற்குமேல் இவ்விஷயத்தைக் கூறி, நான் எழுதிய கட்டுரையை நானே குழப்பி விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.