வாக்குத் திருட்டு, அதைக் கண்டுபிடியுங்கள்' என்று சொன்னால் நீதி கிடைக்குமா?.. தலைமை தேர்தல் ஆணையரை மாற்றுங்கள்: முரசொலி!!
சென்னை: ‘வாக்குத் திருட்டு நடந்துள்ளது, அதைக் கண்டுபிடியுங்கள்' என்று ஞானேஷ்குமாரிடம் போய் சொன்னால் நீதி கிடைக்குமா? என்று தேர்தல் ஆணையரை முரசொலி விமர்சித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும் என முரசொலி நாளிதழில் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறியதாவது; தேர்தல்களை பொறுப்பாக நடத்த வேண்டிய தேர்தல் ஆணையர், அதுகுறித்த கேள்விகளைக் கேட்டால் பொறுப்பற்ற முறையில் பதில்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் சொல்வதைத்தான் உடனடியாகச் செய்ய வேண்டும்.
பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் எடுத்து வைத்து அங்கு வாக்குத் திருட்டு எப்படி நடந்துள்ளது என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். இவை இரண்டுக்கும் தானாக முன் வந்து பதில் அளித்திருக்க வேண்டும் தேர்தல் ஆணையம். மாறாக பொய்சமாளிப்பு பதில்களைத் தான் சொல்லி வருகிறது தேர்தல் ஆணையம்.
“வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏழு நாட்களுக்குள் தனது கையெழுத்துடன் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், அக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று உறுதி செய்யப்படும். அதற்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சொல்லி இருக்கிறார். இது தலைமைத் தேர்தல் ஆணையரின் பொறுப்பான பதில் அல்ல. ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட அப்பட்டமான மிரட்டல் ஆகும்.
இந்த அதிகாரத்தை அவருக்கு கொடுத்தது யார்? எந்த தைரியத்தில் அவர் இப்படி பேசுகிறார்? நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் எடுத்த பிறகு உறுப்பினர் ஒருவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் பொறுப்பேற்க வேண்டியது அவரது கடமை ஆகும். இதனை உணர்ந்தவர்தான் ராகுல் காந்தி அவர்கள். பொத்தாம் பொதுவாக, 'இப்படி எல்லாம் நடக்கிறது' என்று அவர் பேசவில்லை. 'இப்படித்தான் அந்தத் தொகுதியில் நடந்திருக்கிறது' என்பதை தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களைக் கையில் வைத்துக் கொண்டு சொல்லி இருக்கிறார் ராகுல் காந்தி. இதற்கு மேல் என்ன உறுதிமொழிப் பத்திரத்தை எதிர்பார்க்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்?
வாக்களிக்கும் உரிமை என்பது இந்திய அரசமைப்புச் சட்டம், இந்திய நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள உரிமை ஆகும். அந்த உரிமையைப் பாதுகாக்கும் கடமை, தேர்தல் ஆணையத்துக்குத்தான் உண்டு. அந்த உரிமையை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை ஆகும். அந்த உரிமை தொடர்பாக கேள்வி எழுப்பும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. பதில் சொல்லும் கடமை தேர்தல் ஆணையத்துக்குக் கிடையாதா?
தனது பொறுப்பை தட்டிக் கழிக்கும் வகையில்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் பேட்டி அமைந்துள்ளது. அவர் தலைமைத் தேர்தல் ஆணையராகச் செயல்படவில்லை. பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளராகவே மாறிவிட்டார். இந்த ஞானேஷ்குமாரிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் இந்த ஞானேஷ்குமார், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நெருக்கமானவர். அதனால்தான் தேர்தல் ஆணையர் ஆனார். பின்னர் தலைமைத் தேர்தல் ஆணையராகவே கடந்த பிப்ரவரி மாதம் ஆக்கப்பட்டார்.
ஞானேஷ்குமார் நியமனத்தை ‘பண்பற்ற நியமனம்' என்று அப்போதே கண்டித்தார் ராகுல் காந்தி. “புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன நடைமுறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 48 மணி நேரத்துக்குள் விசாரணைக்கு வர உள்ள நிலையில், அந்தப் பதவிக்குப் புதியவரைத் தேர்ந்தெடுத்து பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும் மேற்கொண்ட முடிவு பண்பற்ற நடவடிக்கை” என்று குற்றம் சாட்டி இருந்தார் ராகுல் காந்தி. " புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கி தேர்தல் நடைமுறையின் நேர்மை குறித்த கோடிக்கணக்கான வாக்காளர்களின் கவலையை மோடி அரசு அதிகப்படுத்தி உள்ளது” என்றும் ராகுல் சொல்லி இருந்தார்.
புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்க டெல்லியில் அதற்கான கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி இருந்தார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் ராகுல்காந்தி பங்கெடுத்தார். அமைச்சர் என்ற வகையில் அமித்ஷா இருந்தார். பிரதமர் - எதிர்க்கட்சித் தலைவர் - உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை கடந்த முறையே மாற்றிவிட்டது பா.ஜ.க. அரசு. இதனை அந்தக் கூட்டத்தில் சுட்டிக் காட்டி பேசினார் ராகுல்காந்தி. “புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி வர இருக்கிறது. எனவே புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்தை ஒத்தி வைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொள்ளவில்லை பா.ஜ.க. அரசு. உச்சநீதிமன்ற நீதிபதி இக்குழுவில் இடம் பெற்றால் தாங்கள் நினைப்பவரை நியமித்துக் கொள்ள முடியாது என்று நினைத்தார்கள். எனவே, பிப்ரவரி 17 ஆம் தேதி நள்ளிரவே ஞானேஷ்குமாரை, தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்து விட்டார்கள். இப்படி நியமிக்கப்பட்டவர்தான் இந்த ஞானேஷ்குமார். இவர், பா.ஜ.க.வுக்கு விசுவாசமாகத் தானே இருப்பார்?
“பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும்.” என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு 2023 ஆம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அதை மீறி நியமிக்கப்பட்டவர்தான் இந்த ஞானேஷ்குமார். இத்தகையவர் பா.ஜ.க. சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?
‘வாக்குத் திருட்டு நடந்துள்ளது, அதைக் கண்டுபிடியுங்கள்' என்று இவரிடம் போய் சொன்னால் நீதி கிடைக்குமா? ஞானேஷ்குமாரை மாற்ற வேண்டும். அதன்பிறகுதான் மற்ற புகார்களை விசாரித்தால் உரிய விளக்கம் கிடைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.