கடனை திரும்ப கேட்டு லைகா நிறுவனம் வழக்கு: விஷால் ரூ.21 கோடி செலுத்த உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்புக்கு ஐகோர்ட் தடை
சென்னை: நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி பணத்தை திருப்பித் தர விஷாலுக்கு உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனிநீதிபதி, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்குமாறு விஷாலுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே? என்று விஷால் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டார். இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம், 15 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமாகும். வட்டி தொகை மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வருகிறது. லைகா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக்காரர் இல்லை என்றார்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியானால் திவாலானவர் என அறிவிக்க தயாராக இருக்கிறீர்களா?. 30 சதவீத வட்டி என்பது மிக அதிகம். இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்யுமாறு விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.