சேலம், ஈரோடு, போத்தனூர் வழியாக விசாகப்பட்டணம்-கொல்லம் இடையே சபரிமலை சிறப்பு ரயில் இயக்கம்
சேலம்: விசாகப்பட்டணம்-கொல்லம் இடையே சேலம், ஈரோடு, போத்தனூர் வழியே சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா தொடங்கியநிலையில், நாடு முழுவதும் இருந்து ஐயப்ப பக்தர்கள், யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் செல்ல வசதியாக ரயில்வே நிர்வாகம் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதன்படி, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டணத்தில் இருந்து கொல்லத்திற்கு சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் வழியாக 3 மாத காலத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதன்படி, விசாகப்பட்டணம்-கொல்லம் சிறப்பு ரயில் (08539) நாளை முதல் ஜனவரி 20ம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் (10 சேவை) இயக்கப்படுகிறது. விசாகப்பட்டணத்தில் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு சாமல்கோர்ட், ராஜமுந்திரி, விஜயவாடா, நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியே சேலத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 2 மணிக்கு வந்து, ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவல்லா, செங்கானூர், காயங்குளம் வழியாக கொல்லத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது.
இதையடுத்து மறுமார்க்கத்தில், கொல்லம்-விசாகப்பட்டணம் சிறப்பு ரயில் (08540) நாளை மறுநாள் (19ம் தேதி) முதல் ஜனவரி 21ம் தேதி வரை புதன்கிழமை ேதாறும் (10 சேவை) இயக்கப்படுகிறது. கொல்லத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, எர்ணாகுளம் டவுன், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியே சேலத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 4.05 மணிக்கு வந்து, காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா வழியாக விசாகப்பட்டணத்திற்கு இரவு 11 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.