ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய விருதுநகர் ராணுவ வீரர் உயிரிழப்பு
ஏழாயிரம்பண்ணை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய விருதுநகர் மாவட்ட ராணுவ வீரர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே முத்துச்சாமிபுரத்தை சேர்ந்தவர் சரண் (29). இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி பவித்ரா (24) என்ற மனைவியும், 11 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவ முகாமில் (54 ஆர்.ஆர் பிரிவில்) பணிபுரிந்து வந்தார்.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆபரேஷன் சிந்தூரிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 22ம் தேதி பணியில் இருந்த சரணுக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான முத்துச்சாமிபுரத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.