விருத்தாசலம் அருகே இன்று காலை தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்து 10 மாணவர்கள் படுகாயம்: ரயில் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே இன்று காலை ரயில்வே தண்டவாளத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 10 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அப்போது ரயில் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புது விளாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். பள்ளி நாட்களில் மாணவ, மாணவிகளை வேனில் ஏற்றிச்சென்று பள்ளியில் விட்டு விட்டு, மாலையில் வகுப்புகள் முடிந்ததும் அவர்களை வேனில் ஏற்றி வீடுகளில் விடுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை மங்கலம்பேட்டை அருகே உள்ள கோ.பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பள்ளி வேனில் ஏற்றிக் கொண்டு, விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது காலை 8.30 மணி அளவில் கோ.பூவனூர் ரயில்வே கேட் அருகே வேன் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரயில்வே இருப்புப் பாதையில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த மாணவர்கள் அஸ்வின், ஜெகதீஸ், வசந்த், அஸ்விகா, அனந்திகா உள்ளிட்ட பத்து மாணவர்கள் காயமடைந்தனர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். பின்னர் காயமடைந்த மாணவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வேனை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, காலை 8.30 மணி அளவில் தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிறிது நேரத்தில் அதாவது காலை 8.40 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வது வழக்கம். விபத்து நடந்தவுடன் அப்பகுதி மக்கள் வேனை அப்புறப்படுத்தி விட்டனர். இல்லாவிட்டால் ரயில்மோதி பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 8ம்தேதி காலை கடலூர் முதுநகர் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில்மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த பரபரப்பு அடங்குவதற்குள் மங்கலம்பேட்டையில் தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து 10 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பள்ளி வாகனங்களை இயக்குபவர்கள் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.