வைரலோ வைரல்
நீருக்குள் வாக்கிங்!
மார்பளவு நீரில் இருந்தபடியே ட்ரெட்மில் செய்யும் வகையிலான ஒரு கருவி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உடற்பயிற்சி மற்றும் கார்டியோ துறையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் வகையில் இந்த அதிநவீன கண்டுபிடிப்பு அமைந்துள்ளதாக ஆரோக்கிய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் சிலர் பயிற்சி செய்யும்படியான வீடியோக்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த சில வருடங்களாகவே இந்த ட்ரெட்மில் முறை இணையத்தில் வைரலாவது குறிப்பிடத்தக்கது. இதை சீனா அறிமுகப்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தள பதிவுகளில் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் அமெரிக்காவை சேர்ந்த பௌல் ஹெட்ரிக் மற்றும் அன்சன் ஆகியோர் இதை கண்டுபிடித்ததாகவே உறுதியான தகவல்கள் கூறுகின்றன. பொதுவாகவே தரையில் செய்யப்படும் பயிற்சிகளை விட நீருக்குள் செய்யப்படும் உடற்பயிற்சிகளுக்கு பலன் இரண்டு மடங்கு அதிகம். எனவே தான் நீருக்குள் ஜும்பா, வாக்கிங், ஓட்டம், யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அதிகம் டிரெண்டாகி வருகின்றன.
இந்தியாவின் முதல் ஐமேக்ஸ் படம்!
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் , நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் டீஸர் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு ‘வாரணாசி ‘எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாகுபலி சீரிஸ் மற்றும் RRR திரைப்படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்குவதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தின் டீஸர், வெளியான 24 மணி நேரத்திற்குள் 13 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இது இந்தியத் திரையுலகின் புதிய சாதனையாக மாறியிருக்கிறது. கிபி 512 ஆம் ஆண்டு தொடங்கும் திரைப்படத்தின் டீஸர் காட்சி பிரம்மாண்டத்தின் நுழைவாயிலை திறந்துள்ளது. டீஸர் காட்சிகள் சர்வதேச தரத்தில், தொழில் நுட்பத்தின் உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் முதல் ஐமேக்ஸ் படமாக்கல் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்கிற நிலையில் இப்படத்தின் காட்சிகள், குறிப்புகள், மீம்கள் என எங்கும் வைரலாகி வருகிறது.
கின்னஸ் சாதனை படைத்த பாடகி!
பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால்.தமிழ்,தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். “ எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’’ படத்தில் உன்னால் உன்னால் பாடல் பாடியவர் இவரே. உடன் 200க்கும் மேலான பாடல்களைப் பாடியிருக்கிறார். தனது சகோதரர் பலாஷ் உடன் இைணந்து, அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏழைக் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக நிதிதிரட்டி வழங்குகிறார். இதுவரை 3,800-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகளுக்கான நிதி உதவிகளைச் செய்து உள்ளார் பலக். இதற்காக லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அவர் இடம் பெற்றுள்ளார்.ஏழைக்குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆசை அவர்கள் ரயில்பெட்டிகளைச் சுத்தம் செய்வதைப் பார்த்தபோது தொடங்கியது என்று தெரிவித்துள்ள பலக், இதற்கு நிதி திரட்டு வதற்காகவே இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். தற்போது பலக் மற்றும் பலாஷ் சேவையை பாராட்டி இவர்களுக்குப் பாராட்டு கொடுத்ததுடன், இணைய மக்கள் பலரும் பண உதவியுடம் கொடுக்க முன் வந்துள்ளனர்.