2023 மே 3ல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பின்னர் மணிப்பூருக்கு முதல்முறையாக செல்கிறார் பிரதமர் மோடி: ரூ.8500 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
இம்பால்: வன்முறையால் பாதிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக மணிப்பூருக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். அப்போது ரூ.8500கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை ெதாடங்கி வைக்க உள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே 3ஆம் தேதி வன்முறை வெடித்தது. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இன்னும் பலர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை அங்கு அமைதி திரும்பவில்லை. இன வன்முறை வெடித்த மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஒரு முறை கூட சென்று பார்க்கவில்லை.
தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் மாநிலத்துக்கு செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடியின் மணிப்பூர் வருகை தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘‘மணிப்பூரின் உள்ளடக்கிய நிலையான மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான தனது உறுதிபாட்டிற்கு இணங்க பிரதமர் சூரசந்த்பூரில் ரூ.7300கோடிக்கும் மேல் மதிப்புள்ள பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இம்பால் மாவட்டத்தில் ரூ.1200 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சி திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மணிப்பூரில் 31 திட்டங்களில் புதிய மக்கள் செயலகம், காவல் தலைமையகம் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும் ரூ.1,200 கோடி மதிப்பிலான 17 திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டுவார்’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2 மணியளவில் மணிப்பூர் தலைநகர் இம்பால் செல்கிறார்.
அங்கிருந்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட காங்லாவுக்குச் செல்வார். அங்கு அவர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களுடன் உரையாடுகிறார். அதைத் தொடர்ந்து, அவர் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றுவார் என்று தெரிகிறது.
இது குறித்து தலைமை செயலாளர் புனீத் குமார் கோயல் கூறுகையில்,‘‘பிரதமரின் இந்த மணிப்பூர் பயணமானது மாநிலத்தில் அமைதி, இயல்பு நிலை மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சூரசந்த்பூர் மற்றும் இம்பாலில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுடன் பிரதமர் கலந்துரையாடுவார். மாநில வருகையின்போது பிரதமர் மோடி இரண்டு பேரணிகளில் பங்கேற்று உரையாற்றுவார்” என்றார்.
* பிரதமரின் மணிப்பூர் பயணம் கேலிக்கூத்து
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பிரதமர் மோடி மணிப்பூர் வருவதற்கான அறிவிப்பானது அதிகாரப்பூர்வமானது. அவர் 3 மணி நேரத்திற்கும் குறைவாகவே அங்கு செலவிடுவார். அமைதி, நல்லிணக்கத்திற்கான ஒரு சக்தியை வழங்குவதற்கு பதிலாக இந்த பயணம் உண்மையில் ஒரு கேலிக்கூத்தாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலவர் கெய்ஷாம் மேகசந்திரா தனது வீடியோ செய்தியில், ‘‘பிரதமர் மோடியின் வருகையை வெறும் அடையாளமாகவும், நாடகமாகவும் கருதுகிறேன். பிரதமரின் வருகையானது வெற்றுத்தனமானது. அமைதியை நிலைநாட்டுவதையும் நீதியை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டிருக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
* மோடி வருகைக்கு எதிர்ப்பு பேனர்கள் தீவைத்து எரிப்பு
பிரதமரின் மணிப்பூர் வருகையையொட்டி,20 அடிக்கும் அதிக நீளமுள்ள பேனர் பாஜ மாநில தலைமையகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுராசந்த்பூர் மாவட்டத்தில் பிரதமரை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், கொடிகள் மற்றும் விளம்பரப் பதாகைகளை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி, தீ வைத்தனர்.
பிரதமர் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் பி.எஸ்.எப். ஹெலிபேட் அருகே உள்ள பியாசன்முன் கிராமம் மற்றும் போங்மோல் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தடுத்தபோது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.