விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அரசு பள்ளி சுற்றுச்சுவர், மைதானம்
*மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை
விழுப்புரம் : விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இயங்கி வந்த அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் தற்போது பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிக்கட்டிடம் இயங்கி வருகிறது. எனவே மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் அருகே தளவானூர் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 150 மாணவ, மாணவிகள் படித்து வரும் இப்பள்ளிக்கு கடந்த 2016-2017ம் ஆண்டில் ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்தின் 2 ஏக்கர் பரப்பளவில் பள்ளி புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியில் ரூ.25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை உடைப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
ஆற்றங்கரையோரம் உள்ள கரைகள் அரிப்பு ஏற்பட்டது. அதோடு பள்ளியை சுற்றி கட்டப்பட்ட தடுப்புச்சுவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் பள்ளியின் விளையாட்டு மைதானமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் பள்ளியின் கட்டிடம் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இருப்பினும் அந்த புதிய கட்டிடத்தில் தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தடுப்பணைக்கு பதிலாக தற்போது ரூ.84 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது பள்ளியில் சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அதனை மீட்டு கொடுக்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பள்ளியின் கட்டிடத்துக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தற்காலிக நடவடிக்கையாக கற்கள் கொட்டப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐஐடி குழு மூலம் ஆய்வு செய்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், பள்ளிக்கு தேவையான மைதான இடவசதியை வேறு இடத்திலாவது ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டிடத்தை மாற்று இடத்திலோ இல்லை, அங்கேயே செயல்படுவதற்கு பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் வகுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.