விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் 9230 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
விழுப்புரம்: விழுப்புரத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 9230 பயனாளிகளுக்கு ரூ.119.70 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5, 6ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்ட அவர் தேர்தல் பணிகள் குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து நேற்று இரவு விழுப்புரத்தில் தங்கினார்.
இன்று 2வது நாளாக அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி இன்று காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அரசு சட்டக் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீடியோகான்பரன்சிங் மூலம் துவங்கி வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 9230 பயனாளிகளுக்கு ரூ.119.70 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள், வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் சம்பந்தமாக உரிய ஆலோசனை, அறிவுரைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மதிய உணவுக்கு பிறகு விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி சிந்தாமணியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், திமுக மாநில துணை பொது செயலாளர் பொன்முடி, ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான், மாவட்ட பொறுப்பாளர்கள் லட்சுமணன் எம் எல்ஏ, செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ, கௌதமசிகாமணி, விசிக ரவிக்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் அன்னியூர் சிவா, மணிக்கண்ணன், பாமக சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.