எங்கள் குடும்பங்கள் நடுரோட்டில்... மறந்து விட்டாயே விஜய் அண்ணா?; திருச்சியில் பரபரப்பு போஸ்டர்கள்:சமூக வலைதளங்களில் வைரல்
திருச்சி: எங்கள் குடும்பங்கள் நடுரோட்டில் நிற்கின்றன; எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா என்று திருச்சியில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் பலியான 41 பேர் குடும்பத்தினரை ஒரு மாதத்துக்கு பின் விஜய் இன்று நேரில் வரவழைத்து சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் விஜய்க்கு எதிராக திருச்சி மாநகரில் பல்ேவறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதில், விபத்தில் உயிரிழந்த விஜயின் தொண்டர்களை விஜய் மறந்து விட்டதாக கூறியும், எங்கள் குடும்பம் நடு ரோட்டில் நிற்பதா? உள்ளிட்ட வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்.27ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த தவெகவின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் தெற்கு மாவட்ட துணை தலைவர் கலை ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். இருவரின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ‘வீர தேவேந்திர மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை’ என்கிற பெயரில் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டர்களில் இருவரின் ஆத்மாக்கள் பேசுவது போல் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது. அதில், சீனிவாசன், வக்கீல். உறையூர் கலை ஆத்மா வாயிலாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் உயிர் நீத்தோம் எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா, 15 ஆண்டு காலமாக உங்கள் பின்னால் அணிவகுத்தோம் எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா!, கட்சி மாநாட்டிலும், பொது கூட்டத்திலும் கூட எங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லையே விஜய் அண்ணா!, முதல் சுற்றுப்பயணம் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தாயே விஜய் அண்ணா அப்போது எங்களுடைய உழைப்பில் முதல் வெற்றியை பெற்றீர்களே, அப்போது கூட எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா, கரூர் துயர சம்பவத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தத்து பிள்ளையாக இருப்பேன் என்று உறுதி அளித்து உள்ளீர்களே விஜய் அண்ணா, எங்கள் குடும்பம் எல்லாம் நடுரோட்டில் கிடப்பதா விஜய் அண்ணா, நீங்கள் மறந்தாலும் மேலும் மேலும் நீங்கள் உயர எங்களுடைய ஆத்மா வழி நடத்தும் விஜய் அண்ணா... என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ மற்றும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.