விஜய்யுடன் பேச்சா? எடப்பாடி பரபரப்பு: டிடிவி நடத்துவது எல்லாம் ஒரு கட்சியா? என தாக்கு
சேலம்: விஜய்யுடன் பேசினீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்து உள்ள எடப்பாடி, டிடிவி தினகரன் நடத்துவது எல்லாம் ஒரு கட்சியா?. அவரது விமர்சனத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என காட்டமாக தெரிவித்து உள்ளார். சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம், சூரப்பள்ளி கிராமம், வாத்திப்பட்டி ஏரி, பெரியசோரகை கிராமம், வைரன் ஏரி ஆகியவை, மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தின் மூலம் நிரம்பியது. இந்த ஏரிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, உங்களது சுற்றுப்பயணத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் கலந்து கொள்கின்றனரே என்று செய்தியாளர் கேட்டதற்கு, தவெக தொண்டர்கள், அவர்களாகவே எங்களது பிரசாரத்தில் கலந்து கொள்கிறார்கள். நாங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் என்ன?. நாங்கள் கூட்டணி வைத்ததை பொறுக்க முடியவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்புகின்றனர்’ என்று எடப்பாடி தெரிவித்தார்.
அதிமுகவுடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி வலுவாகுமா என கேள்விக்கு, ‘நாங்கள் ஏற்கனவே ஒவ்வொரு முறையும் தெளிவாக கூறி வருகிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி பற்றி அறிவித்திருக்கிறோம். சில நேரங்களில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கூட, கூட்டணி குறித்து தெரிவித்திருக்கிறோம். கூட்டணி அமைந்து விட்டால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறார்கள்’ என்றார்.
தமிழக வெற்றிக்கழக தலைவருடன் நீங்கள் போனில் பேசியதாக சொல்கிறார்களே?. ஏதாவது ஆறுதல் தெரிவித்தீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, இல்லை. நாங்கள் ஏற்கனவே மக்களை பார்த்து, பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் ெசால்லி விட்டோம். அவர்களுக்கு எல்லாம் தெரியும். சம்பவம் நடந்ததும் எனக்கு தகவல் கிடைத்தது. நான் சென்னையில் இருந்தேன். உடனே இரவே விரைந்து கரூருக்கு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன் என்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸை மருத்துவமனையில் சந்தித்த போது, அரைமணி நேரத்திற்கும் மேலாக கூட்டணி குறித்து பேசியதாக கூறுகிறார்களே என செய்தியாளர் கேட்டதற்கு, அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் சென்று பார்த்தேன். அவ்வளவு தான் என்றார். அதிமுகவுடன் தவெக கூட்டணி சேர்ந்து விட்டால், பாஜவை இபிஎஸ் கழட்டி விட்டு விடுவார் என டிடிவி தினகரன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, டிடிவி தினகரன் நடத்துவது எல்லாம் ஒரு கட்சியா?
அதிமுக 2 கோடி தொண்டர்கள் உள்ள கட்சி. அதற்கு தகுந்த மாதிரி கேள்வி கேளுங்கள். யார், யாரோ பேசியதற்கு எல்லாம் கேள்வி கேட்காதீர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான விமர்சனத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு யாராவது ஆதரிப்பாரா என்று எதிர்பார்த்தார். அவர் நினைத்தது நடக்கவில்லை. அதனால், இப்படிப்பட்ட வார்த்தையை கக்கிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.