விஜய்க்கு வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
சென்னை: விழுப்புரம் மண்டல நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று ஆலோசனை நடத்தினார். பிறகு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: விஜய்யை பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா என்று கேட்கிறீர்கள். கண்டிப்பாக இந்த கூட்டம் ஓட்டாக மாறாது. அது எல்லா தலைவருக்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும். இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பொருந்தும். கூட்டம் சேர்ந்துவிட்டால், அவையெல்லாம் ஓட்டாக மாறாது. விஜய் நல்ல பாதையில் செல்ல வேண்டும்.
தைரியமாக முன்னேறுங்கள். மக்களுக்காக செய்யுங்கள். எல்லா அரசியல்வாதிகளுக்கும் வைக்கக்கூடிய வேண்டுகோள்தான் இது. மக்களில் ஒருவனாக இதைத்தான் சொல்லியிருப்பேன். நாட்டு மக்களான எங்களையும் கொஞ்சம் பாருங்கள், எங்களின் முன்னேற்றத்துக்காக வேலை செய்யுங்கள். எந்த இடத்தில் கொண்டு போய் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் உங்களை வைப்போம் என்று மக்கள் சொல்கிறார்கள்.
அதைத்தான் நானும் சொல்கிறேன். சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை மநீம தொடங்கிவிட்டது. திமுகவின் தலைமைக்கு நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம். அன்பாக, கண்ணியமாக இருக்கிறார்கள். 75 ஆண்டு கால கட்சி அது. எல்லா உரிமையையும் தட்டிக் கேட்டுவிட முடியாது. அவர்களது செயல்பாடுகளை தட்டிக் கேட்கக்கூடிய உரிமையை எல்லா மக்களுக்கும் கொடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
அதில் ஒருவனாக நான் கேட்கலாம். ஆனால், இதை கொடுங்கள், அதை கொடுங்கள் என்று 75 ஆண்டு கால கட்சியை எப்படி கேட்க முடியும்? எங்கள் தகுதியை நிரூபித்துக்கொண்டு, அதற்கு ஏற்ற மாதிரி தொகுதி கொடுங்கள் என்று கேட்பதுதான் நியாயமாக இருக்கும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.